மும்பை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது குறித்து, முன்னாள் இந்திய உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலான தேர்வு என்று அவர் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதோடு, 604 ரன்களை 175.07 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். பேட்டிங்கில் உச்சகட்ட ஃபார்மில் இருந்த அவர், ஆசிய கோப்பை அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் அவர் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "இது ஷ்ரேயாஸின் தவறு அல்ல. ஆனால், தற்போதுள்ள வீரர்களில் யாரை நீக்கிவிட்டு அவருக்கு வாய்ப்பு கொடுப்பது? இது துரதிர்ஷ்டவசமானது" என விளக்கம் அளித்திருந்தார்.
அகர்கரின் இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத அபிஷேக் நாயர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விவாதத்தில் தனது காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், "அஜித் அகர்கரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் அவ்வளவு வலுவான போட்டியாளராக இருந்தால், அவர் ஏன் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்கூட இல்லை?" என நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு கட்டத்திற்குப் பிறகு, அணித் தேர்வு என்பது மற்ற வீரரை விட உங்களுக்கு யாரை கொஞ்சம் அதிகமாகப் பிடித்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயரை மற்ற வீரர்களைப் போல யாருக்கும் பிடிக்காமல் இருக்கலாம்."
"15 பேர் கொண்ட அணியில் கூட இல்லை, ஏன் 20 பேர் கொண்ட திட்டத்தில்கூட ஸ்ரேயாஸ் இல்லை என்பது அவருக்கு அனுப்பப்படும் ஒரு செய்தி. ஒருவேளை அணியில் மாற்றம் தேவைப்பட்டால் கூட, ரியான் பராக் அல்லது வேறு யாராவது வருவார்களே தவிர, நீங்கள் வரமாட்டீர்கள் என்பது போல இது இருக்கிறது" என்று காட்டமாக விமர்சித்தார் அபிஷேக் நாயர்.
அபிஷேக் நாயரின் இந்த கருத்து, அணித் தேர்வில் வெளிப்படைத்தன்மை உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திறமையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் உள்ளதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சமீபத்தில் இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் அபிஷேக் நாயர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், அவர் தேர்வுக்குழு மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒரு திறமையான வீரர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல என்பதே பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.