IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிராக யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த அபிஷேக் ஷர்மா.. அதிவேக அரைசதம்
துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் போட்டியில், இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளார். குறிப்பாக, தனது குருநாதரான யுவராஜ் சிங்-இன் நீண்ட கால சாதனை ஒன்றை முறியடித்து, கிரிக்கெட் உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் ஷர்மா பெற்றுள்ளார்.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, அபிஷேக் ஷர்மா தொடக்கம் முதலே சரவெடியாக வெடித்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 24 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில், யுவராஜ் சிங் 29 பந்துகளில் அடித்த அரைசதமே, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் அதிவேக அரைசதமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை 25 வயதான அபிஷேக் ஷர்மா முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டு அபிஷேக் மற்றும் கில்-ஐ சீண்ட முயன்றபோதும், இருவரும் தங்களது பேட்டிங்கால் தக்க பதிலடி கொடுத்தனர்.
சிறந்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடம்:
அரைசதத்துடன் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ளாத அபிஷேக், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் யுவராஜ் சிங்-ஐ (72 ரன்கள்) அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி (82*) மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அபிஷேக் தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
புதிய வரலாற்றுச் சாதனை படைத்த தொடக்கக் கூட்டணி:
மேலும், அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி, இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 10 ஓவர்களுக்குள் 105 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. இது, டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் சிறந்த தொடக்கக் கூட்டணி ஆகும்.
இதற்கு முன்பு, 2012 ஆம் ஆண்டு பெங்களூருவில் கௌதம் கம்பீர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஜோடி 77 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அதை இந்த இளம் ஜோடி தகர்த்துள்ளது. மேலும், 2025 ஆசிய கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட முதல் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அபாரமான தொடக்கத்தின் காரணமாகவே இந்திய அணி, 18.5 ஓவர்களில் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications