மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஃபிட்டாகவில்லை என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அவரை கழற்றிவிட பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய மூவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பைத் தொடர் டி20 வடிவத்தில் விளையாடப்பட உள்ளது. அதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார்.

தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் ஆலோசித்து வருகின்றனர். அந்த அணியில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லை பொருத்தி பார்க்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருவதாகவும், துணைக் கேப்டன் பதவியை சுப்மன் கில் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சுப்மன் கில்லின் டி20 பேட்டிங் இன்னும் உச்சத்தைப் பெறவில்லை. அவர் தொடக்கத்தில் சில ஓவர்கள் நிதானமாக விளையாடிவிட்டு, அதன்பின் அட்டாக்கில் ஈடுபட்டு வருகிறார். கன்சிஸ்டன்சியுடன் விளையாடினாலும், பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடாதது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் கூட 156 ஸ்ட்ரைக் ரேட்டில் 650 ரன்களை விளாசி இருக்கிறார்.
அதேபோல் நம்பர் 3, நம்பர் 4, நம்பர் 5 ஆகிய பேட்டிங் வரிசையில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிரந்தர வீரர்களாக ஆடி வருகின்றனர். இதனால் சுப்மன் கில் தொடக்க வீரராக மட்டுமே விளையாட முடியும். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அட்டகாசமான ஃபார்மில் இருந்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் சதங்களாக விளாச, அபிஷேக் சர்மா பட்டாசாய் வெடித்து வருகிறார். இருவருமே 40 பந்துகள் ஆடினாலே ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றக் கூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள். இதனால் சுப்மன் கில்லை சேர்ப்பதில் பயிற்சியாளர் கம்பீர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வைக்க முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படியே சுப்மன் கில்லை டி20 அணிக்குள் கொண்டு வந்தாலும், அவரால் எதிர்பார்த்த அளவிற்கு அதிரடியாக விளையாட முடியுமா என்பதும் சந்தேகம் தான். டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், கம்பீர் ரிஸ்க் எடுக்க வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது.