மும்பை: 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதுகுறித்து தனது மௌனத்தைக் கலைத்துள்ளது.
மத்திய அரசின் கொள்கைகளின்படியே பிசிசிஐ செயல்படுவதாகவும், பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் எந்தவொரு நாட்டுடனும் விளையாட அரசு தடை விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவுகளை முற்றிலுமாகத் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும், 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தச் சூழலில்தான், பிசிசிஐயின் இந்த விளக்கம் வந்துள்ளது.

இந்தச் சர்ச்சை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்த பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, இதுகுறித்து விரிவாக விளக்கினார். "பிசிசிஐயின் பார்வையைப் பொறுத்தவரை, மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளை நாங்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். சமீபத்தில், பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா பங்கேற்பது தொடர்பான நமது கொள்கை தெளிவாகக் கூறுகிறது."
"அதன்படி, இந்தியாவுடன் நட்புறவில் இல்லாத நாடுகளுக்கு எதிராக விளையாடுவதற்கு மத்திய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே, பல நாடுகள் பங்கேற்கும் எந்தவொரு தொடரிலும் இந்தியா அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும்" என்று அவர் கூறினார்.
மேலும், "ஆசியக் கோப்பை என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் ஒரு பன்னாட்டுத் தொடர் என்பதால், நாங்கள் இதில் பங்கேற்றே ஆக வேண்டும். இதேபோல, ஐசிசி நடத்தும் எந்தவொரு தொடரிலும், இந்தியாவுடன் நல்லுறவில் இல்லாத ஒரு நாடு பங்கேற்றாலும், நாங்கள் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இருதரப்பு தொடர்களைப் பொறுத்தவரை, நாங்கள் எந்தவொரு விரோத நாட்டுடனும் விளையாடப் போவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஒருவேளை, இது போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் பாகிஸ்தானுடனான போட்டிகளை இந்தியா புறக்கணித்தால், அதனால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகள் குறித்தும் சைகியா விளக்கம் அளித்தார். "ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது ஐசிசி நடத்தும் பன்னாட்டுத் தொடர்களை இந்தியா புறக்கணித்தால், அல்லது கிரிக்கெட்டைத் தாண்டி, ஃபிஃபா கால்பந்து, தடகளம் போன்ற பிற விளையாட்டுகளில் ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் விளையாட மறுத்தால், சம்பந்தப்பட்ட இந்திய விளையாட்டு சம்மேளனங்களுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதை மேலும் தெளிவுபடுத்த, அவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை உதாரணமாகக் காட்டினார். "ஒருவேளை, தடகளப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பங்கேற்பதால், அவருடன் போட்டியிடக் கூடாது என்று இந்திய தடகள சம்மேளனம் அந்தத் தொடரைப் புறக்கணிப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தச் சூழ்நிலையில், இந்திய தடகள சம்மேளனத்தின் மீது சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டால், நமது வீரர் நீரஜ் சோப்ராவால் வேறு எந்த சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போகும். இது நமது வீரர்களின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று அவர் விளக்கினார்.
"கிரிக்கெட் மட்டுமல்லாது, பிற விளையாட்டுகளையும் கருத்தில் கொண்டு, நமது வீரர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே, இந்திய அரசு இந்தக் கொள்கையை மிகவும் கவனமாக வகுத்துள்ளது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என்று சைகியா கூறினார்.