மும்பை: டாக்காவில் பரபரப்பாக நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் முடிவடைந்துள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இனிப்பான செய்தி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆசிய கோப்பை 2025 தொடர் நடைபெறுமா, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் சில நாட்களில் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்கூட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும், அனைவரின் பார்வையும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதுதான் இருந்தது.

இந்தக் கூட்டத்தில் ஆசிய கோப்பைத் தொடரை நடத்துவது என கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் பொறுப்பு பிசிசிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில வர்த்தக ரீதியான பிரச்சனைகளை பிசிசிஐ சரிசெய்து வருவதாகவும், அவை அனைத்தும் முடிவடைந்தவுடன் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வெளியாகும் என கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா இந்த தொடரை அதிகாரப்பூர்வமாக நடத்தினாலும், போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அல்லது பாகிஸ்தான் தொடரை நடத்தும் சமயங்களில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, பொதுவான இடத்தில் போட்டிகளை நடத்துவது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முன்னரே எடுத்த முடிவின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த முறை 8 அணிகள் வரை பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எல்லாவற்றையும் விட, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் ஆட்டம் இந்தத் தொடரில் நிச்சயம் இடம்பெறும் என்பதுதான் முக்கியமான அம்சமாக உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது பாகிஸ்தான் அணியை இரண்டு முறை வீழ்த்தி இருந்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி பேசுகையில், "கூட்டத்தில் 25 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஆசிய கோப்பை குறித்த அறிவிப்பை பிசிசிஐ சில நாட்களில் வெளியிடும்" என்று கூறியுள்ளார். இதன் மூலம், தொடர் நடப்பது உறுதியாகியுள்ளது. இனி, பிசிசிஐ வெளியிடும் அதிகாரப்பூர்வ அட்டவணைக்காக ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.