துபாய்: இந்தியா வென்ற 2025 ஆசியக் கோப்பையை இந்திய அணிக்கு வழங்காத விவகாரம் நீடித்து வரும் நிலையில், துபாயில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (பிசிபி) தலைவர் மோஷின் நக்விக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் மோஷின் நக்வி, 2025 ஆசிய கோப்பையை இந்திய வீரர்கள் தன் கையில் இருந்து வாங்க வேண்டும், இல்லையெனில் கோப்பையை தர முடியாது என வீம்பாக எடுத்துச் சென்றார். அந்த கோப்பை இதுவரை இந்தியாவிற்கு வந்து சேரவில்லை.

இது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கிய திருப்பமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்தியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இணைந்து மோஷின் நக்விக்கு வேறு ஒரு விஷயத்திற்காக அழுத்தம் கொடுக்க உள்ளனர்.
டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிசிசிஐ ஏற்கனவே மோஷின் நக்விக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுப் பட்டியலைத் தயாரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் மையமாக, நக்வி ஒரே நேரத்தில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் எனப் பல முக்கியப் பதவிகளை வகிப்பது குறித்துக் கேள்வி எழுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ஐசிசியின் நிர்வாக விதிகளை மீறும் செயல் என்று பிசிசிஐ தரப்பில் வாதிடப்பட உள்ளது.
மோஷின் நக்வி துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அவர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக முன்னதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரத்தில் பிசிசிஐக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ஏசிபி) ஆதரவும் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ராணுவத் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தை சேர்ந்த ஒரு நபர் கூறுகையில், "நக்வி தனது பதவிகளில் ஒன்றிலிருந்து விலக வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஆப்கானிஸ்தான் ஆதரிக்கும். ஆனால் நக்வி பின்வாங்க வாய்ப்பில்லை," என்று கூறினார்.
நக்வி ஒருவேளை இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால், பிசிசிஐ எழுப்பும் முதல் மற்றும் முக்கியப் பிரச்சினையாக ஆசியக் கோப்பை இருக்கும். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. அப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்குக் கோப்பையை வழங்க மோஷின் நக்வி முன்வந்தபோது, பாகிஸ்தான் செனட் சபையில் அவர் பதவி வகிப்பதைக் காரணம் காட்டி, அவரிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கோப்பையை வேறு யாரிடமாவது வழங்கச் சொல்லாமல், நக்வியே கோப்பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். கோப்பையைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பிசிசிஐ பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்திய அணி தன்னிடம் இருந்து நேரடியாகப் பெற வேண்டும் என்பதில் நக்வி உறுதியாக இருக்கிறார். அதுவே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.