துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரை வென்று கோப்பையை வென்ற கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்துள்ள ஒரு செயல், ஒட்டுமொத்த தேசத்தின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்தத் தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியுடன் ஆடினாலும், நாட்டின் கொள்கைகளுக்கு ஏற்ப அவர்களுடன் கைகுலுக்காமல் தவிர்த்த சூர்யகுமார் யாதவ், தொடரின் முடிவில் இந்திய இராணுவத்துக்கு சிறப்பு மரியாதை செய்துள்ளார்.
இந்த தொடரில் தனது போட்டிச் சம்பளமாகப் பெற்ற ₹28 லட்சத்தை, இந்திய ராணுவத்திற்கும், பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

"இந்தத் தொடரிலிருந்து கிடைத்த எனது போட்டிச் சம்பளத்தை, நமது ராணுவப் படைகளுக்கும், பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவாக வழங்க நான் முடிவு செய்துள்ளேன். நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருப்பீர்கள். ஜெய் ஹிந்த்," என்று சூர்யகுமார் யாதவ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வீரர்களுக்கு ஒரு டி20 போட்டிக்கு ₹4 லட்சம் போட்டிச் சம்பளமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆசிய கோப்பை தொடரில் ஆடிய 7 போட்டிகளுக்காக, சூர்யகுமார் யாதவ் பெற்ற மொத்த சம்பளத் தொகையான ₹28 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்தத் தொடர் முழுவதும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் அரசியல் ரீதியான கருத்துகள் மற்றும் சைகைகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தனது வெற்றியை ராணுவத்திற்கு அர்ப்பணித்திருந்தார்.
அவரது அந்தக் கருத்துகள் 'அரசியல் ரீதியானது' என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சூழலிலும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, தனது சம்பளத்தையே ராணுவத்திற்கு அர்ப்பணித்த சூர்யகுமாரின் செயல், அவரது தேசப்பற்றை வெளிப்படுத்தி, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.