மும்பை: பல மாத கால யூகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முழுமையான அட்டவணை மற்றும் அணிகள் குறித்த விவரங்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தத் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வந்த அரசியல் பதட்டங்களால் தொடர் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அனைத்து தடைகளையும் தாண்டி பிசிசிஐ இந்தத் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி, செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்பட்சத்தில், செப்டம்பர் 21ஆம் தேதி மீண்டும் ஒருமுறை இவ்விரு அணிகளும் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தத் தொடருக்காக 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'குரூப் ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், 'குரூப் பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒரு சிறந்த முன்னோட்டமாக இந்த ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்கவைக்குமா அல்லது பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் சவால் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆசியாவின் கிரிக்கெட் திருவிழாவுக்கான கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தாக்குதல் சம்பவங்களுக்குப் பிறகு எல்லைப் பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் உறவைத் துண்டிக்க வேண்டும் என்று இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்தன. இதனால், 2025 ஆசிய கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.