மும்பை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அளித்த விளக்கம், ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
செவ்வாயன்று, பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில், ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இல்லாதது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித் அகர்கர், "இது ஸ்ரேயாஸ் ஐயரின் தவறு அல்ல. தற்போதுள்ள அணியில் உள்ள வீரர்களில் யாரை நீக்கிவிட்டு அவருக்கு வாய்ப்பு கொடுப்பது? அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்" என்று கூறினார். மேலும், அணியின் சரியான கலவையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அஜித் அகர்கரின் இந்த விளக்கத்தை ஏற்காத கிரிக்கெட் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 2025 ஐபிஎல் சீசனில் 604 ரன்களை 175 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த ஒரு வீரரை எப்படி புறக்கணிக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், "இன்னும் எத்தனை ரன் அடித்தால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கும்?" என்றும், "திறமையான வீரருக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது" என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சில ரசிகர்கள், கவுதம் கம்பீரின் விருப்பான வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், சுப்மன் கில்லை வருங்கால கேப்டன் ஆக்கும் முயற்சியாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த திடீர் நீக்கம், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் இந்த கோபத்திற்கு பிசிசிஐ என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.