துபாய்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் எந்தெந்த போட்டி எந்த நகரத்தில் நடைபெறும் என்ற அட்டவணை அறிவிக்கப்படவில்லை என்றாலும் போட்டிகள் எந்தெந்த நேரத்தில் நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பிடித்து குரூப் சுற்று போட்டிகளில் மோத இருக்கின்றன.

தற்போது பிசிசிஐயின் இந்த முடிவு தான் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. கடந்த மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போர் பதற்றம் நிலவியது. இதில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்கி கொண்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் எல்லை ஓரத்தில் இருபதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இதனை கண்டித்து இரு நாடுகளுக்கும் இடையே இனி எந்தவித கிரிக்கெட் போட்டியும் நடைபெற கூடாது என்ற முடிவில் மத்திய அரசு இருந்தது. அண்மையில் நடைபெற்ற உலக சாம்பியன் லெஜண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து பல முன்னணி இந்திய வீரர்கள் விலகினர். இதன் காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலைகள் இருக்கும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டியில் ஒரு முறை இல்லாமல் அதிகபட்சமாக மூன்று முறை மோத வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியுடன் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட மாட்டோம் என இந்தியா கூறியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆசியக் கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் பி சி சி ஐ ஏன் இந்த தொடருக்கு ஒப்புக்கொண்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ராணுவ வீரர்களின் உயிரை விட பணம்தான் முக்கியமா என்றும் சமூக வலைத்தளத்தில் பலரும் பிசிசிஐ சாடி வருகின்றனர். பாகிஸ்தான் உடன் இந்தியா மோதினால், இனி எந்த ஒரு இந்தியப் போட்டிகளையும் நாங்கள் பார்க்க மாட்டோம் என்றும் அவர்கள் புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.