மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தமக்கு விருப்பமுள்ள வீரர்களை மட்டும்தான் ஆதரவு கொடுத்து வளர்ப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் குற்றம் சாட்டுகிறார்.ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் இடம் தரவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கம்பீர், கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக இருந்த போது அவரால் வளர்க்கப்பட்ட ஹர்ஷித் ரானா என்ற வேகப்பந்துவீச்சாளருக்கு ஆசிய கோப்பையில் இடம் கிடைத்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சடகோபன் ரமேஷ், கம்பீருக்கு எந்த வீரரை பிடிக்கிறதோ, அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றார். பிடிக்காத வீரர்களை அணியை விட்டு நீக்குகின்றார்.
வெளிநாட்டு தொடர்களில் இந்தியா வெற்றி பெறுவது என்பது கோலி, ரவி சாஸ்திரி தலைமையில் தான் ஆரம்பித்தது. ஆனால் நாம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டிரா மட்டுமே செய்திருக்கின்றோம். ஆனால், அதையே மிகப்பெரிய சாதனை போல் கம்பீர் மாற்றிவிட்டார். கம்பீரின் பயிற்சியாளர் பணியிலே மிகப்பெரிய சாதனை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி மட்டும் தான்.
அதற்கு முக்கிய காரணம் ஸ்ரேயாஸ் என்பதை மறந்து விட வேண்டாம். அப்படி இருக்கும் போது கம்பீர் ஏன் அவருக்கு ஆதரவு தருவதில்லை. இதே மாதிரி, ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரர் இந்தியாவின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஆனால் அவரை ரிசர்வ் அணியில் வைத்திருப்பது மிகவும் மோசமான ஒரு முடிவு. இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
அப்படி இருக்கும் போது தொடர்ந்து அவரை ஒருநாள், டி20 போட்டிகளில் சேர்த்திருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஒரு வீரராக தற்போது நல்ல நம்பிக்கையுடன் உள்ளார். அப்படி இருக்கும் போது அவருக்கு ஆதரவு வழங்கினால் நிச்சயம் பல்வேறு சாதனைகளை புரிவார் என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2025 ipl சீசனில் ஸ்ரேயாஸ் 604 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவர் ஸ்ட்ரைக் ரேட் 174 என்ற அளவில் இருந்தது. அதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரில் 300 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். அதில் அவருடைய 188 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.