மும்பை: இந்திய கிரிக்கெட்டின் 3 வகையான அணிகளுக்கும் ஒரே கேப்டனை கொண்டு வர பயிற்சியாளர் கம்பீர் முடிவு எடுத்துள்ளார். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் சுப்மன் கில்லை சேர்க்கவும், 3 வகையான அணியிலும் ஒரே மாதிரியான கலாச்சாரத்தை உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்னும் 2 நாட்களில் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த அணியில் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லை சேர்க்கலாமா, வேண்டாமா என்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி, டி20 உலகக்கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பயணத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தொடங்கி இருக்கிறார். 3 வகையான இந்திய அணிக்கும் 3 இந்திய கேப்டன்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனை மாற்றம் செய்ய பிசிசிஐ நிர்வாகம் விரும்பி வருகிறது.
அதேபோல் ஒரே மாதிரியான டீம் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பதிலும் கம்பீர் தெளிவாக இருக்கிறார். தற்போது ஆசியக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டாலும், அடுத்தக் கேப்டனை உருவாக்குவதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதனால் சுப்மன் கில்லை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அதற்கு கம்பீர் பாசிட்டிவ் சிக்னல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப இந்திய அணியில் எந்த வீரருக்கும் ரோல் கொடுக்காமல், முழுக்க முழுக்க டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக சிவம் துபே, ரிங்கு சிங் உள்ளிட்டோர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசக் கூடியவர்கள்.
அவர்களுக்கு ஃபினிஷர் ரோல் அளிக்கப்பட்டுள்ளது. இனி ரோல் என்று பிரத்யேகமாக கொடுக்காமல், எந்த நேரத்தில் களமிறங்கும் வகையில் டி20 கிரிக்கெட் அணியை மாற்ற கம்பீர் முடிவு எடுத்துள்ளார். மாறி வரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப, தகவமைத்துக் கொள்ளும் வீரர்களையே இந்திய அணியில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் இடத்தில் சுப்மன் கில்லையும், ரிங்கு சிங் இடத்தில் சஞ்சு சாம்சனையும் களமிறக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.