மும்பை: இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் குறித்த விவாதத்தில், ஹர்திக் பாண்டியா பெயர் இல்லை, இளம் வீரர் சுப்மன் கில் தான் சூர்யகுமார் யாதவுக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பதவியை பெறுவார் என பிசிசிஐ வட்டரத்தில் கூறப்படுகிறது. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கேப்டன்சி விவகாரத்தில் சுப்மன் கில்லை தாண்டி யாரையும் யோசித்துக் கூட பார்க்கவில்லை என்பதே இதற்கு காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன்பே ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இனி ஹர்திக் பாண்டியா மூத்த வீரர், ஆல் ரவுண்டர் என்ற அடையாளத்துடன் மட்டுமே அணியில் இருப்பார். எந்த பதவியும் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2023 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்ததை அடுத்து இந்திய டி20 அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
ஆனால், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயம் மற்றும் ஐபிஎல் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகச் சந்தித்த படுதோல்விகள், அவரது கேப்டன்சி கனவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீரின் வருகை, பாண்டியாவின் கேப்டன் பதவிக்கு கிட்டத்தட்ட ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது. கம்பீர், நீண்ட கால அடிப்படையில் ஒரு கேப்டனை உருவாக்கவே விரும்புவதாகவும், அவரது பார்வை முழுவதும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் மீதுதான் உள்ளது.
துவக்கம் முதலே சுப்மன் கில் மீது கம்பீருக்கு ஒரு தனிப் பிரியம் இருக்கிறது. தற்போது, மூன்று விதமான அணிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சுப்மன் கில்லையே கேப்டனாக நியமிக்க அவர் விரும்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி, பேட்டிங்கிலும் ரன் மழை பொழிந்த சுப்மன் கில், தேர்வுக்குழுவினரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். இதனால், வரவிருக்கும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான டி20 அணியில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், துணை கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்படலாம்.
ஆசிய கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியா ஒரு வீரராக இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவரது கேப்டன்சி கனவு தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஒரு காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த பாண்டியா, இன்று தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கம்பீரின் வருகை, இந்திய அணியில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நீண்ட கால அடிப்படையில் ஒரு வலுவான அணியை உருவாக்கும் அவரது திட்டம், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால், இது ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. ஆசிய கோப்பை அணித் தேர்வு, இந்த மாற்றங்களின் முதல் படியாக இருக்கும்.