மும்பை: 2025 ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது. ஆனால், கோப்பை மட்டும் பாகிஸ்தானிடம் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமாக இருக்கும் மோஷின் நக்வி ஆசிய கோப்பையை தன்வசம் வைத்துள்ளார். இந்த நாடகத்தை கண்டு கொதித்து போய் இருக்கும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஹர்பஜன் சிங், மோஷின் நக்வியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"கோப்பையை இந்திய அணிக்குக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் அளவுக்கு நக்வி ஒன்றும் பெரிய ஆள் கிடையாது" என்று அவர் பதிலடிகொடுத்து பேசி இருக்கிறார். எப்போது இருந்தாலும் அந்த கோப்பை இந்தியாவசம் வந்துதான் ஆக வேண்டும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

செப்டம்பர் 28 அன்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், அதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழா, ஒரு நாடக மேடையாக மாறியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பரிசளிப்பு விழா தாமதமானது. இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தனிநபர் விருதுகளை மட்டும் இந்திய வீரர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால், வெற்றி பெற்ற அணிக்கான கோப்பை வழங்கப்படவில்லை. இதையடுத்து, மோஷின் நக்வி கோப்பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்தக் கோப்பை, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், மோஷின் நக்வியின் செயலைக் கடுமையாக விமர்சித்தார். "கோப்பையை இந்திய அணிக்குக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் அளவுக்கு நக்வியோ அல்லது வேறு யாருமோ பெரிய ஆள் கிடையாது. இந்தியா தொடரை வென்றுவிட்டது, அதுதான் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கோப்பை. இன்று இல்லை என்றாலும் நாளை அந்தக் கோப்பை எங்களுக்குத்தான் வந்து சேரும். அதைத் தடுத்து வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? நாங்கள் வென்றுவிட்டோம், கோப்பை எங்களிடம் வந்தே தீரும்" என்று ஹர்பஜன் சிங் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை முடிந்த பிறகு நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில், பிசிசிஐ பிரதிநிதிகளான ராஜீவ் சுக்லா மற்றும் ஆஷிஷ் ஷேலர் ஆகியோர், மோஷின் நக்வியிடம் இதுகுறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். ஆனால், கோப்பை எப்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்பதற்கு நக்வி எந்த நேரடியான பதிலையும் அளிக்கவில்லை.
மேலும், தனது நடத்தைக்காகப் பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறிய நக்வி, "கோப்பை வேண்டு என்றால், இந்திய அணியினர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்திற்கு வந்து வாங்கிக்கொள்ளலாம்" என்று திமிராகப் பதிலளித்தது, இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியது.
மோஷின் நக்வியின் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை குறித்து, வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் பிசிசிஐ புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. மோஷின் நக்வியின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான நாடகங்கள் எல்லாம் எடுபடாது என்றும், வெற்றி பெற்ற கோப்பை இந்தியாவை வந்தடையும் என்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.