துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் காட்டிய '6-0' சைகை பெரும் கண்டனங்களைப் பெற்ற நிலையில், அவரது மனைவி முஸ்னா மசூத் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.
நேற்றைய போட்டியின்போது, இந்திய ரசிகர்களைச் சீண்டும் வகையில் ஹாரிஸ் ரவுஃப் சில சைகைகளை செய்தார். 'ஆபரேஷன் சிந்தூரை" தொடர்ந்து நடந்த எல்லை மோதலில் ஆறு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த ஆதாரமற்ற தகவலைக் குறிப்பிட்டு, '6-0' என்று சைகை காட்டினார் ஹாரிஸ் ரவுஃப். மேலும், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதைப் போல நடித்துக் காட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஹாரிஸ் ரவுஃப்-இன் மனைவி முஸ்னா மசூத், தனது இன்ஸ்டாகிராம் 'ஸ்டோரி'யில், கணவர் '6-0' சைகை காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "போட்டியில் தோற்றோம், ஆனால் போரில் வென்றோம்" (Lost the match but won the battle) என்று தலைப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி, இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு விளையாட்டுப் போட்டியை, போருடன் ஒப்பிட்டுப் பதிவிட்டது விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து, அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சில மணி நேரத்தில் நீக்கப்பட்டது. பொதுவாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் 24 மணி நேரம் தெரியும் என்ற நிலையில், அது வைரலான சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அபாரமான 'பார்ட்னர்ஷிப்', இந்தியாவின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. அபிஷேக் ஷர்மாவின் 74 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. போட்டியின்போது இந்திய தொடக்க ஆட்டக்காரர்களுக்கும், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடந்தாலும், இந்திய வீரர்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து, 7 பந்துகள் மீதமிருக்க வெற்றியை வசப்படுத்தினர்.
இந்த வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை தொடரில் தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற, அடுத்து வரும் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதும் என்ற வலுவான நிலையில் இந்தியா உள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டி வாய்ப்பைப் பற்றி சிந்திக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.