துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 127 ரன்களுக்கு ஒன்பது விக்கெட் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இந்திய அணி 15 புள்ளி 5 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். பாகிஸ்தான் அணியின் பலமே அந்த அணியில் உள்ள பேட்டிங்கில் இருக்கும் சையும் அயூப், முகமது ஹாரிஸ், பக்கர் சமான் மற்றும் சல்மான் ஆகா போன்ற நான்கு வீரர்கள் மட்டும்தான்.

ஆனால் இந்திய அணி வீரர்கள் அவர்களை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்துவிட்டார்கள். இதனால் பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் தடுமாறியது. குறிப்பாக சையும் அயூப் ஆட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வ பந்திலே டக் அவுட் ஆனார்.
மேலும் கடந்த போட்டியில் அரை சதம் அடித்த முகமது ஹாரிஸ் இந்த போட்டியில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைப்போன்று கேப்டன் சல்மான் ஆகா மூன்று ரன்களிலும், அனுபவ வீரர் பக்கர் சமான் 17 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் வெற்றிக்கு முக்கிய காரணம் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தான். மும்மூர்த்தி போல் இருக்கும் குல்திப் யாதவ், அக்ஸர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் மூவரும் இணைந்து 12 ஓவர்கள் வீசினர்.
இதில் குல்திப் மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் என மொத்தம் ஆறு விக்கெட்டுகளை இந்த ஜோடி கைப்பற்றியது. அது மட்டுமில்லாமல் 12 ஓவர்களில் வெறும் 60 ரன்கள் மட்டுமே இந்த ஜோடி விட்டுக் கொடுத்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் பாகிஸ்தான் அணியால் மீண்டும் எழ முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ராவும் தன்னுடைய அனுபவ பந்துவீச்சை இன்று வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபர்கான், பும்ரா பந்துவீச்சிலேயே தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.
இதுவே மற்ற வீரராக இருந்திருந்தால் இரண்டு சிக்ஸர்கள் சென்றவுடன் உத்வேகத்தை இழந்து மேலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருப்பார்கள். ஆனால் பும்ரா இரண்டு சிக்ஸர்களை விட்டுக் கொடுத்தும் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்த பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை தந்தது. இந்த மூன்று காரணங்களால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது.எனினும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தது இந்தியா செய்த தவறாக பார்க்கப்படுகிறது. அதற்கு பதில் ஒரு முழு நேர வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங்கை சேர்க்க வேண்டுமென கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.