IND vs PAK: ரத்தமும், நீரும் கலக்காது.. பஹல்காம் தாக்குதலில் மகனை இழந்தவர் ஆசிய கோப்பைக்கு எதிர்ப்பு
துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில், நடைபெறவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலில் தனது மகனைப் பறிகொடுத்த சஞ்சய் திவேதி என்பவர், இந்தப் போட்டிக்கு எதிராகத் தனது கண்டனத்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இது தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமாக பலியானார்கள். இந்தத் தாக்குதலில் தனது மகன் சுபம் திவேதியை இழந்த சஞ்சய் திவேதி, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிராகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

"ஏப்ரல் 22 அன்று, நம் நாட்டின் 26 அப்பாவி மக்களை பாகிஸ்தான் கொன்றது. அப்போது, 'ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது' என்று கூறி, பாகிஸ்தானுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள மாட்டோம் என இந்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்போது இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டி நடக்கப் போவதை அறிந்த நாள் முதல், நான் மட்டுமல்ல, இந்த நாடு முழுவதுமே அதை எதிர்த்து வருகிறது.
பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ, விளையாட்டு ரீதியாகவோ எந்த உறவும் கூடாது என்பதே அனைவரின் எண்ணம். நான் இந்தப் போட்டியை வன்மையாக எதிர்க்கிறேன். மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, மத்திய அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சஞ்சய் திவேதி செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் கண்ணீருடன் கூறியுள்ளார்.
வலுக்கும் எதிர்ப்பு:
சஞ்சய் திவேதியின் குரல் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இந்தப் போட்டிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர். சிவசேனா (UBT) தலைவர் ஆதித்ய தாக்கரே, பிசிசிஐயின் முடிவைக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சரியாகும் வரை, கிரிக்கெட் நடக்கக் கூடாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் #BoycottINDvsPAK என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி, ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைக் கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அரசின் கொள்கை என்ன?
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு கொள்கையின்படி விரோத நாடுகளுடன் பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் விளையாடலாம் என கூறப்படுகிறது. அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், ஆசிய கோப்பை போன்ற பன்னாட்டு தொடர்களில் பங்கேற்கத் தடையில்லை என்று பிசிசிஐ கூறி உள்ளது. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே, பிசிசிஐ இந்தப் போட்டிக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, செப்டம்பர் 19-ஆம் தேதி ஓமன் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. சூப்பர் 4 சுற்றிலும், இறுதிப் போட்டியிலும் கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்தப் போட்டி தொடர்பான சர்ச்சை இந்த தொடர் முழுவதும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications