துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை படுதோல்வி அடையச் செய்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் அணியை சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வெளியிட்டுள்ள பதிவு, தற்போது பரவி வருகிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை இனி 'பகைமை' (Rivalry) என்று அழைப்பதை நிறுத்துங்கள்" என்று கூறியதைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங்கும் அதே கருத்தை தனது பாணியில் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யகுமார், "15 போட்டிகளில் 8-7 என முடிவுகள் இருந்தால் அது பகைமை. ஆனால் இங்கு 12-3 என்பது போன்ற நிலையில் உள்ளது. இது ஒரு போட்டியே அல்ல" என்று கூறி, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தினார்.

சூர்யகுமார் யாதவின் இந்தக் கருத்தை ஆமோதிக்கும் வகையில், ஹர்பஜன் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "மாபெரும் பகைமை (Greatest Rivalry)" என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தில், 'மாபெரும் (Greatest)' என்ற வார்த்தையை அடித்துவிட்டு, அதற்குப் பதிலாக 'ஒருதலைப்பட்சமான (One-sided)' என்று மாற்றிப் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் எப்போதுமே இந்தியாவின் பக்கமே ஒருதலைப்பட்சமாக சாய்ந்திருப்பதாக அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு, இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில், இந்திய அணி 12 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி வெறும் 3 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரங்களே, இந்தப் போட்டிகள் எந்த அளவிற்கு ஒருதலைப்பட்சமாக இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன. முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய கேப்டனின் இந்தக் கருத்துகள், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.