துபாய்: துபாயில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றுப் போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப்-இன் செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா-வின் அதிரடியான 74 ரன்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அபிஷேக் ஷர்மாவை வம்பிழுத்த ஹாரிஸ் ரவுஃப் பின்னர் இந்திய ரசிகர்களை பார்த்து சில சைகைகளை செய்தார். அதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.

தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அபிஷேக் ஷர்மா வெறும் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில், திலக் வர்மா (30) மற்றும் ஹர்திக் பாண்டியா (7) ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களை வார்த்தைகளாலும், சைகைகளாலும் சீண்ட முயன்றனர். குறிப்பாக, ஹாரிஸ் ரவுஃப் எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது, இந்திய ரசிகர்கள் 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அடித்த சிக்ஸரை நினைவுபடுத்தி, "கோலி, கோலி" என்று முழக்கமிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவுஃப், ரசிகர்களை நோக்கி '6-0' என்று சைகை காட்டினார். இது கடந்த மே மாதம் நடந்த ராணுவ மோதலில் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதைக் குறிப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதைப் போல அவர் நடித்துக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் பாகிஸ்தான், இந்திய போர் விமானங்களை வீழ்த்திய ஆதாரம் எதுவும் இல்லை. எனினும், பாகிஸ்தான் இராணுவம் சொல்லி வரும் பொய்யை தான் ஹாரிஸ் ரவுஃப் 6 - 0 என சைகை செய்து இருக்கிறார். அதே போல ஒருமுறை ஹாரிஸ் ரவுஃப் போர் விமானம் போல சைகை செய்தும் காட்டினார். போட்டியில் திறமையை காட்டாமல் கையில் சைகை செய்து "பாவ்லா" காட்டினார் ஹாரிஸ் ரவுஃப்.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய அபிஷேக் ஷர்மா, பாகிஸ்தான் வீரர்களின் ஆத்திரமூட்டும் செயல்கள் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அதனாலேயே பேட்டிங்கில் ஆக்ரோஷமாக விளையாடி அவர்களுக்குப் பதிலடி கொடுக்க நினைத்ததாகவும் கூறினார்.
அதேபோல, போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகளை இனி 'ரைவல்ரி', அதாவது எதிரி அணிகள் மோதும் போட்டி என்று கூற வேண்டாம் என்று குறிப்பிட்டார். "15 போட்டிகளில் 8-7 என முடிவுகள் இருந்தால் அது 'ரைவல்ரி'. ஆனால் இங்கு 13-1 (12-3) என்பது போன்ற நிலைமையில் இது ஒரு போட்டியே அல்ல" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார். இந்த வெற்றி சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.