துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திய நிலையில், சேசிங் செய்தபோது இந்திய அணி என்ன மனநிலையில், என்ன திட்டமிட்டு ஆடியது என்பதைத் துவக்க வீரர் சுப்மன் கில் விவரித்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி முதலில் தடுமாறியது. முதல் 4 ஓவர்களிலேயே 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அதன் பிறகு மிகவும் நிதானமாக ஆடியது.
அதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆடுகளம் மந்தமாக இருந்ததால், இந்திய அணி விரைவாக ரன் சேர்க்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. எனினும், திலக் வர்மா மற்றும் சிவம் துபே அதிரடியாக ஆடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதுபற்றிப் பேசிய சுப்மன் கில் முதலில் அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்கம் அளித்தது பற்றி குறிப்பிட்டார். "இந்த ஒட்டுமொத்த தொடரும் அற்புதமாக இருந்தது. நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடினோம். அபிஷேக் ஷர்மாவுடன் பேட்டிங் செய்வது அற்புதமாக இருந்தது. இந்தப் போட்டியில் இலக்கு பெரியதாக இல்லை. ஆனால், நாங்கள் மூன்று விக்கெட்டுகளை மிகவும் விரைவாகவே இழந்து விட்டோம்.
ஆனால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் சிவம் துபே சிறப்பாகப் பேட்டிங் செய்தனர். அதிலும் சிவம் துபே அடித்த சிக்ஸர்கள் அற்புதமாக இருந்தன. மூன்று ஓவரில் 30 ரன் வேண்டும் என்ற நிலையிலும் எங்களிடம் பதற்றம் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.
ஆடுகளத்தின் தன்மை மற்றும் பவுண்டரி தூரம் குறித்துப் பேசிய கில், "இது மந்தமான ஆடுகளம். மேலும் பவுண்டரி எல்லைகளும் சற்றுப் பெரிதாகவே இருக்கும். ஆனாலும் அந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் (திலக் வர்மா மற்றும் சிவம் துபே) அழுத்தத்தை உள்வாங்கி பந்துகளை ஆடுகளத்துக்கு வெளியே பறக்கவிட்டனர். அதுவே எங்கள் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது," என்றார். தோல்வியின் விளிம்பில் இருந்து இந்தப் போட்டியைத் திலக் வர்மா மற்றும் சிவம் துபே இணைந்து வெற்றியை நோக்கித் திருப்பியதை, சுப்மன் கில் தனது பேச்சில் பாராட்டினார்.