துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியவுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெறிகொண்ட வேங்கையாகச் சீறினார். தான் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்தும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் அவர் கொண்டாடிய அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தப் போட்டிக்கு முன்பே இந்திய அணி ஒரு சிக்கலில் இருந்தது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்ததால், அவர் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக வேறு ஆல்-ரவுண்டர் யாரையும் அணியில் தேர்வு செய்ய முடியாத நிலையில், ஏற்கனவே அணியில் இருந்த சிவம் துபேவை வைத்துச் சமாளிக்கலாம் என்ற முடிவை எடுத்தார் கௌதம் கம்பீர். ஆடும் லெவனில் ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளரைச் சேர்ப்பதற்குப் பதிலாக, அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கை அணியில் சேர்த்தார். இந்த முடிவு முதலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், பவர் பிளே ஓவர்களில் யார் பந்து வீசுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பவர் பிளே ஓவர்களில் சிவம் துபேவை பந்து வீச வைத்தார். அந்த முயற்சி வெற்றி பெற்றது. சிவம் துபே பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த முதல் முயற்சி வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி ஒட்டுமொத்தமாகப் பாகிஸ்தானை 146 ரன்களுக்குச் சுருட்டியது.
அடுத்து இந்திய அணி 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது, பேட்டிங்கில் சற்றுத் தடுமாறியது. முதல் 12 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து, மேலும் 4 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தச் சூழ்நிலையில், திலக் வர்மா மற்றும் சிவம் துபே அணியை மீட்டனர்.
கடைசி ஓவரில் 10 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆடுகளத்தில் இருந்தனர். சிவம் துபே சிக்ஸரை அடித்து விட்டு, ஸ்ட்ரைக்கை ரிங்கு சிங் வசம் அளித்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி அடிக்கவே, இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது. தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியாக இருந்தன என்பதைப் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றதன் மூலம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிரூபித்தார்.
இந்த வெற்றியின் உச்சகட்டமாக, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார். தான் அமர்ந்திருந்த ஓய்வறையில் கைமுஷ்டியை மடக்கி, ஆவேசமாக அவர் கத்தினார். பின்னர் அங்கிருந்த இந்திய வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்களை அணைத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.