துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், கடந்த வாரம் இந்தியாவிடம் அடைந்த தோல்வியும், அதைத் தொடர்ந்து நடந்த கை குலுக்க மறுத்த சர்ச்சையும் பாகிஸ்தான் அணியை மனதளவில் தீவிரமாகப் பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவாக, சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவை மீண்டும் எதிர்கொள்ளும் முக்கியமான போட்டிக்கு முன்பாக, பாகிஸ்தான் வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர அவசரமாக ஊக்கமூட்டும் பேச்சாளரும் (Motivational Speaker), மருத்துவருமான டாக்டர் ரஹீல்-ஐ அணிக்கு வரவழைத்துள்ளது.
துபாயில் கடந்த செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. ஆனால், போட்டியின் முடிவை விட, போட்டிக்குப் பிறகு நடந்த சம்பவங்கள்தான் பெரும் புயலைக் கிளப்பின. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியது.

இந்தச் செயல், பாகிஸ்தான் அணியினரையும், அந்நாட்டு ரசிகர்களையும் தீவிர அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார். இந்த விவகாரம் அத்துடன் நிற்கவில்லை.
இந்திய வீரர்களின் விளையாட்டு மாண்புக்கு எதிரான செயலுக்கு போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), ஐசிசி-யிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. மேலும், இந்தத் தொடரிலிருந்தே விலகப் போவதாகவும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகின.
இதன் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர், ஐசிசி-யின் தலையீட்டின் பேரில், போட்டி நடுவர் பைகிராஃப்டுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி போட்டியில் தொடர ஒப்புக்கொண்டது.
இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, இந்தியாவிடம் தோல்வியையும் தழுவியது, பாகிஸ்தான் வீரர்களின் மன உறுதியைக் குலைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் வெளிப்பாடாகவே, இந்தியாவிற்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பையும் பாகிஸ்தான் அணி ரத்து செய்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், டாக்டர் ரஹீல் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வீரர்களின் மனநிலையைச் சரிசெய்து, அவர்களை இந்த முக்கியமான போட்டிக்கு மனரீதியாகத் தயார்படுத்துவதே அவரது முக்கியப் பணியாகும். லீக் சுற்றில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கவும், தங்களது ஆசிய கோப்பைக் கனவைத் தக்கவைக்கவும் பாகிஸ்தான் அணி போராடும் நிலையில், இந்த உளவியல் ரீதியான ஆலோசனைகள் அவர்களுக்கு எந்த அளவிற்கு உதவும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மறுபுறம், தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, அதே ஆதிக்கத்தைத் தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் போட்டி, ஒரு கிரிக்கெட் போட்டியாக மட்டுமல்லாமல், ஒரு உளவியல் யுத்தமாகவும் மாறியுள்ளது.