மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் ஆசிய கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆனால் இந்த கூட்டத்தை துபாயில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்திய நிலையில், இதற்கு ஆசிய கிரிக்கெட் சங்கம் மறுத்தது. மேலும் தங்களால் வர முடியவில்லை என்றால் ஜூம் காலில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெறுங்கள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆசிய கிரிக்கெட் சங்க தலைவருமான மோசின் நக்வி கூறி இருந்தார்.

இந்த நிலையில் பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா ஆன்லைன் மூலம் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றார். அப்போது ஆசிய கோப்பை போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை காரணமாக இந்த தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மேலும் இந்தியா தங்களது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தொடர் செப்டம்பர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரு நாடுகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று லீக் சுற்றில் மோத இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வேர்ல்ட் சாம்பியன்ஸ் லெஜென்ஸ் தொடரில் இந்திய வீரர்கள், பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என அந்த போட்டியை புறக்கணித்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத போகிறது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
இது குறித்து பிசிசிஐயின் செயலாளர் தேவஜித் பேசியபோது பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் மூலம் பங்கேற்றார். இதில் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஆசிய கோப்பை போட்டிகளை திட்டமிட்ட படி நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
விரைவில் இதற்கான அட்டவணை வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.