துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரை ஒரு அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. இந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிரான வெற்றிக்குப் பிறகு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இளம் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை "உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன்" என்று புகழ்ந்து தள்ளிய அவர், அடுத்ததாக பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆவலுடன் இருப்பதாகக் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணியை 57 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, பின்னர் அந்த இலக்கை வெறும் 4.3 ஓவர்களில் எட்டிப் பிடித்து சாதனை வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த உடன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது, "ஆடுகளம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க விரும்பினோம். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆடுகளத்தின் தன்மை பெரிதாக மாறவில்லை. வீரர்களிடமிருந்து ஒரு முழுமையான தொழில்முறை ஆட்டம் வெளிப்பட்டது. களத்தில் நல்ல மனப்பான்மையும், ஆற்றலும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன், அது எனக்குக் கிடைத்தது" என்றார்.
மேலும், துபாய் ஆடுகளம் குறித்து பேசுகையில், "சமீபத்தில் இங்கு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பல வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தாலும், சற்று மெதுவாக (slower side) இருந்தது. அதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று கணித்தோம். இங்கு தற்போது வெப்பம் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அவருக்கு ஹர்திக் பாண்டியா, சிவம் துபே மற்றும் பும்ரா ஆகியோரும் சிறந்த ஆதரவை அளித்தனர்" என்று பந்துவீச்சாளர்களைப் பாராட்டினார்.
வெறும் 58 ரன்கள் இலக்கை விரட்டும்போது, 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மாவைப் பற்றி சூர்யகுமார் புகழ்ந்து தள்ளினார். "அவர் ஒரு காரணத்திற்காகத்தான் தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கிறார். நாங்கள் 200 ரன்களைத் துரத்தினாலும் சரி, 50 ரன்களைத் துரத்தினாலும் சரி, ஆட்டத்தின் போக்கை அவர்தான் தீர்மானிக்கிறார். அவரிடமிருந்து வெளிப்பட்டது ஒரு நம்பமுடியாத ஆட்டம்" என்று கூறினார்.
இறுதியாக, கிரிக்கெட் உலகின் மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய சூர்யகுமார், "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று கூறி பேட்டியை முடித்தார். இந்த முதல் வெற்றியின் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்துடன், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.