துபாய்: இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை லீக் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நிலவிய நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவித போட்டியிலும் இந்தியா பங்கேற்க கூடாது என இந்திய ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட் கூட இன்னும் முழுமையாக விற்பனையாக வில்லை. மேலும் இந்திய அணி வீரர்களுக்கு சமூக வலைத்தளத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடைசி நேரத்தில் போட்டி ரத்தாகுமா? இந்திய வீரர்கள் கடைசி நேரத்தில் புறக்கணிப்பார்களா என்ற பல கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளர் கோடாக், பாகிஸ்தான் போட்டி குறித்து முக்கிய கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கின்றோம். எனவே எங்களுடைய கவனம் எல்லாம் கிரிக்கெட்டில் மட்டும் தான் இருக்கும். என்னை பொருத்தவரையில் கிரிக்கெட் விளையாடுவதை தவிர எங்களுடைய மனதில் வேறு எந்த ஒரு விஷயம் இல்லை.
நாங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் தான் முழு கவனத்தை செலுத்தி வருகின்றோம். ஒரு முறை பிசிசிஐ சொல்லிவிட்டால் அதுபடி தான் நாங்கள் கேட்போம். பிசிசிஐ மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனவே நாங்கள் இங்கு போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எப்போதுமே சவாலானதாக இருக்கும். எனவே அந்த சவாலை நோக்கி தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோமே, தவிர வேறு எது குறித்தும் நாங்கள் பேசவில்லை என்று கூறி இருக்கின்றார். இந்திய அணியில் பேட்டிங் பயிற்சியாளரான கோடக் வெளிப்படையாக பாகிஸ்தான் எதிரான போட்டி நடைபெறும் என அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.