மும்பை: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை துபாயில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கிறது.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால், அதற்கு பயிற்சி களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த தொடர் இம்முறை t20 போட்டிகளாக நடத்தப்பட உள்ளது. இந்த சூழலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணி சூரியகுமார் தலைமையில் அபாரமாக விளையாடி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில் அதில் சிறப்பாக செயல்பட்ட கில் உள்ளிட்ட வீரர்கள் டி20 அணியிலும் திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல் இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ரா, ஆசிய கோப்பையில் விளையாட மாட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பும்ரா ஆசிய கோப்பையில் விளையாட ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் லீக் சுற்றில் பாகிஸ்தான் , சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்க பும்ரா விருப்பம் காட்டி இருக்கின்றார். இதனால் பும்ராவையும் சேர்க்க தேர்வுக்குழு முடிவு எடுத்திருக்கின்றது.
அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் இந்த ஆசிய கோப்பை போட்டியின் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களும் ஆசிய கோப்பைக்கு திரும்ப உள்ளனர்.
எனினும் சிராஜுக்கு மட்டும் இந்த தொடரில் ஓய்வு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். இதனால் முழு பலத்துடன் இந்திய அணி இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.