துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வரும் புதன்கிழமை இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.
இந்தியாவை விட யுஏஇ அணி மிகவும் பலம் குன்றிய அணி என்பதால் ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு அளித்து விடலாம் என்ற முடிவில் இந்திய அணியின் நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யுஏஇ அணிக்கு எதிராக பும்ராவின் செயல்பாடு தேவை இருக்காது என்றும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு ஹர்ஷித் ரானா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் இந்த முடிவு சரியாக இருந்தாலும் அது தவறாக போய் முடியலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். காரணம் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலே கடைசியாக விளையாடினார். அதன் பிறகு அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டார். சுமார் ஒன்றரை மாதமாக அவர் எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடவில்லை.
இந்த தருணத்தில் பும்ராவை நேரடியாக பாகிஸ்தானுக்கு எதிரான செப்டம்பர் 14ஆம் தேதி போட்டியில் களமிறங்கினால் அதில் அவர் தடுமாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தை பயிற்சி ஆட்டமாக இந்தியாவின் சீனியர் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதே போன்று ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட ஸ்டார் வீரர்களும் யூஏஇ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் uae அணிக்கு எதிரான ஆட்டம் இந்தியாவுக்கு ஒரு நல்ல பயிற்சி களமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் வரும் புதன்கிழமை இந்தியா விளையாடும் முதல் போட்டியில் சீனியர் வீரர்கள் பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.