துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2025 ஆசிய கோப்பை போட்டியில், முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பே ஒரு பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு அவமானகரமான சம்பவம் ஒன்று நடந்தது. இரு அணிகளும் தேசிய கீதத்திற்காக அணிவகுத்து நின்றபோது, பாகிஸ்தான் தேசிய கீதத்திற்குப் பதிலாக, பிரபல பாப் பாடலான 'ஜலேபி பேபி' பாடல் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்டது, வீரர்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, தொடக்கம் முதலே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது. டாஸ் நிகழ்வின்போதே கேப்டன்கள் சூர்யகுமார் யாதவும், சல்மான் அகாவும் கைகுலுக்கிக் கொள்ளாமல், ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களும் தேசிய கீதத்திற்காக மைதானத்தில் அணிவகுத்து நின்றனர்.

பாகிஸ்தான் தேசிய கீதம் ஒலிக்க வேண்டிய நேரத்தில், துபாய் சர்வதேச மைதானம் முழுவதும் டெஷர் மற்றும் ஜேசன் டெருலோவின் 'ஜலேபி பேபி' பாடல் ஒலித்தது. சுமார் ஆறு வினாடிகள் இந்தத் தவறு நீடித்தது. இதைக் கேட்டு பாகிஸ்தான் வீரர்கள் குழப்பத்திலும், தர்மசங்கடத்திலும் திகைத்து நின்றனர். பின்னர், தவறு சுதாரித்துக் கொள்ளப்பட்டு, பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த குளறுபடி, போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரும் அவமானமாக அமைந்தது.
போட்டிக்கு முன்னதாகவே மைதானத்தில் அனல் பறந்தது. இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வீரர்களுக்கு மிகவும் ஆக்ரோஷமாக உத்வேகம் அளிக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தப் போட்டி நடப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு, டிக்கெட் விற்பனையைப் பாதித்ததாகக் கூறப்பட்டாலும், மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தனர்.
பின்னர் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 127 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு 128 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.