மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய அணியில் கேப்டனாக சூரியகுமார் யாதவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை யுஏஇவில் நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்.

பேட்டிங் வரிசையில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். பொதுவாக டி20 அணிகள் அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும் தான் தொடக்க வீரராக களமிறங்குவார்கள். தற்போது சுப்மன் கில் அணிக்குள் வந்திருப்பதால் தொடக்க வீரர்கள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதனால் சும்மன் கில்லும் சஞ்சு சாம்சனும் தான் தொடக்க வீரராக விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது வீரராக அபிஷேக் ஷர்மாவும்,நான்காவது வீரராக திலக் வர்மாவும் விளையாடக் கூடும். இதேபோன்று நடுவரிசையில் ஐந்தாவது வீரராக சூரியகுமார் யாதவும், ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவும் விளையாடக் கூடும்.
ஏழாவது வீரராக அக்சர் பட்டேலும், எட்டாவது வீரராக வருண் சக்கரவர்த்தியும், ஒன்பதாவது வீரராக குல்தீப் யாதவும் விளையாட கூடும். பத்தாவது வீரராக வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும்,11-வது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கும் விளையாட கூடும். இந்த நிலையில் ஒருவேளை மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என கம்பீர்,சூரியகுமார் முடிவெடுத்தால் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஆல்ரவுண்டர் சிவம் துபே அல்லது அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலக கோப்பை இந்தியா, இலங்கையில் தான் நடைபெற உள்ளது. இதனால் அந்தத் தொடரை மனதில் வைத்துக் கொண்டுதான் தேர்வுக்குழுவினர் அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.எனினும் டி20 உலக கோப்பைக்கான இறுதி அணி இது கிடையாது என்றும் சில மாற்றங்கள் நிகழலாம் என்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.