துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், வங்கதேச அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள போட்டி தற்போது அரையிறுதிப் போட்டியாக மாறி உள்ளது. அந்தப் போட்டியில் வெல்லும் அணிதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், தற்போது சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நான்கு அணிகளுமே தலா இரண்டு போட்டிகளில் ஆடி முடித்துள்ளன. இதில் இந்தியா, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி மற்றும் வங்கதேச அணி தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. இலங்கை அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்த நிலையில், அடுத்ததாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதும் போட்டியும் மட்டுமே மீதம் உள்ளன. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அதில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.
அதே சமயம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிதான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏனெனில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இரண்டுமே இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மேலும் இரண்டு புள்ளிகள் கிடைக்கும். அதன் மூலம் நான்கு புள்ளிகளுடன் பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 25 அன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதவுள்ள சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. செப்டம்பர் 26 அன்று இந்தியா மற்றும் இலங்கை மோதவுள்ள சூப்பர் 4 போட்டி நடைபெற உள்ளது.