மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த மிகப்பெரிய தொடராக ஆசிய கோப்பை டி20 தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் செவ்வாய்க்கிழமை மும்பையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் பும்ரா விளையாடுவாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட கில்லுக்கு மீண்டும் டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியில் யாரை சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆசிய கோப்பைக்கான அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என இரண்டு பேரில் ஏதேனும் ஒரு வீரர் மட்டும் தான் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியும்.
இங்கிலாந்து தொடரில் கில் அபாரமாக செயல்பட்டு 754 ரன்கள் அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே அவர் ஆசிய கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கின்றேன். கில் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்று கூட கிடையாது.
அணியில் இருந்தால் போதும் இதன் மூலம் இந்திய அணியில் ஏதேனும் தொடக்க வீரருக்கு காயம் அடைந்தால் மாற்று வீரராக அவர் அணியில் இருப்பார். சிராஜ், கில் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதற்கான வெகுமதியாக இந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இதேபோன்று துணை கேப்டன் பதவியை அக்சர் பட்டேலுக்கு வழங்க வேண்டும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து தொடரில் அணியில் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத குல்தீப், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முகமது கையிப் தெரிவித்துள்ளார்.
முகமது கையிப் தேர்வு செய்த இந்திய அணி: 1.சஞ்சு சாம்சன், 2, அபிஷேக் சர்மா, 3. திலக் வர்மா, 4.சூர்யகுமார் யாதவ், 5. ஹர்திக் பாண்டியா, 6, அக்சர் பட்டேல், 7. ஜித்தேஷ் சர்மா, 8, சிவம் துபே, 9. வாசிங்டன் சுந்தர், 10. குல்தீப் யாதவ், 11. ஆர்ஸ்தீப் சிங், 12. பும்ரா, 13. வருண் சக்ரவர்த்தி, 14. சுப்மன் கில், 15. முகமது சிராஜ்