சென்னை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை ஆகஸ்ட் 19ஆம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது. பலரும் பும்ரா, கில் ஆகியோருக்கு இடம் தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் டெஸ்ட் தொடரில் மட்டும் பயன்படுத்தி விட்டு, இது போன்ற தொடரில் இருவருக்கும் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இந்திய அணியில் புவனேஸ்வர் குமாரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 87 போட்டிகளில் விளையாடிய புவனேஸ்வர் குமார், மொத்தமாக 90 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய எக்னாமி 6.96மட்டும் தான். அது மட்டுமில்லாமல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் அவர் கடைசியாக நவம்பர் 2022 ஆம் ஆண்டு தான் விளையாடினார்.
இந்த தருணத்தில் ஐபிஎல் போட்டியில் நடந்து முடிந்த சீசனில் புவனேஸ்வர் குமார், 14 போட்டியில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 38 ரன்களை விட்டுக் கொடுத்து, இரண்டு முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் 190 போட்டியில் விளையாடி 198 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தியுள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி உள்ள முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், புவனேஸ்வர் குமாரை இந்திய அணியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் கடந்த சில ஆண்டுகளாக அற்புதமாக பந்து வீசி இருக்கின்றார். ஆனால் கடைசியாக 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தான் அவர் பந்து வீசினார்.
அந்தப் போட்டியில் அவர் சரியாக பந்து வீசவில்லை என்பதற்காக அவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக விளையாடி வருகிறார். ஏன் தேர்வு குழுவினர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை மறுத்து வருகின்றனர் என்று எனக்கு தெரியவில்லை. புவனேஸ்வர் குமார் புதிய பந்தை பயன்படுத்தி அபாரமாக செயல்படுவார். எனவே புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் இடம் தர வேண்டும் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.