மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை பெற்ற நடைபெற இருப்பதால் இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் டி20 தொடராக நடத்தப்பட உள்ளது.
கடந்த முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் மீண்டும் இந்த பட்டத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா போன்ற வீரர்கள் t20 போட்டிகளில் ஓய்வு பெற்றிருப்பதால் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் இந்தியா களமிறங்க போகிறது.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார், ரிங்கு சிங் வீரர்கள் இந்த அணியில் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால்,ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோருக்கு ஆசிய கோப்பை அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் ஏற்கனவே அணியில் பேட்டிங் வரிசை செட் ஆகிவிட்டதால், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் எங்கு விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரியாங் பாஞ்சால், டி20 போட்டிகளில் யார் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்கள் என்று தொடர்பான விவாதம் ஒரு எல்லையே இன்றி சென்று கொண்டிருக்கிறது. ஏன் இது குறித்து இவ்வளவு ஆர்வத்துடன் ரசிகர்கள் விவாதம் செய்கிறார்கள்.
இதில் எந்த அனாலிசிசும் தேவை இல்லை. சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள சிறந்த தொடக்க வீரர்களையும் சிறந்த ஃபினிஷர்களையும் தேர்வு செய்யுங்கள் மற்ற இடத்திற்கு சூழலுக்கு ஏற்ப வீரர்களை மாற்றி களத்தில் இறக்குங்கள் என்று பிரியாங் பாஞ்சால் கூறியுள்ளார்.
ரசிகர் ஒருவர் கில்லை மூன்றாவது வீரராக களம் இறக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு பிரியாங் பாஞ்சால் இந்த பதிலை அளித்துள்ளார்.