மும்பை: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை துபாயில் நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் விதமாக இந்த தொடர் t20 போட்டிகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த தொடரில் எந்தெந்த இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். தற்போது இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து ஒன்றரை மாதத்திற்கு மேல் இந்திய வீரர்கள் விளையாடி இருப்பதால் அவர்களுக்கும் ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் தொடர்வார் என்பது உறுதியாகி இருக்கிறது. தொடக்க வீரர்களாக டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள அபிஷேக் ஷர்மா மற்றும் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெறுவார்கள். மூன்றாவது வீரராக திலக் வர்மா இடம் பெறுவார்.
நான்காம் இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவும், ஐந்தாவது இடத்தில் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாட கூடும். நடு வரிசையில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதேபோன்று அக்சர் பட்டேல், இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத குல்தீப் யாதவ், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணிக்கு திரும்பலாம்.
இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித்ரானா உள்ளிட்டோர் இந்திய அணியில் விளையாடலாம். ஆசிய கோப்பையில் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.இதேபோன்று முஹமது சிராஜுக்கும் ஓய்வு வழங்கப்படலாம். இங்கிலாந்து தொடரில் கடைசி டெஸ்டில் அபாரமாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியாவுக்கும், சிஎஸ்கே ஆல் ரவுண்டர் சிவம் துபேக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அது மட்டுமில்லாமல் ஜெயஸ்வாலும் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கில், சாய் சுதர்சன் ஆகியோர் டி20 அணியில் திரும்புவார்களா இல்லை அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுகிறது.