துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில், இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை சந்திக்க உள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நாளை (செப்டம்பர் 21, 2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்ன? எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்று பார்க்கலாம்.
2025 ஆசிய கோப்பை குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய தெம்புடன் இந்தியாவும், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியுடன் பாகிஸ்தானும் களமிறங்குவதால், இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு அணிகளையும் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் ஃபோர் சுற்றுக்குள் இந்தியா கம்பீரமாக நுழைந்துள்ளது.

சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா என அதிரடியான தொடக்க வீரர்களும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் வீரர்களும் இந்திய அணிக்கு பெரும் பலம். ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடியிருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியப் போட்டியில் அவர்கள் மீண்டும் ஓய்வளிக்கப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான முழு பலம் வாய்ந்த பந்துவீச்சுப் படை களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, சஞ்சு சாம்சன் ஓமன் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீண்டும் ஆறாம் வரிசைக்கு திரும்புவார் என கூறப்படுகிறது. துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
இந்தியா: சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சயிம் அயூப், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஃபக்கர் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது.