துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அடுத்து யாரும் எதிர்பார்க்காத ஒரு பிளேயிங் 11-ஐ அவர் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். டாஸ் முடிவு, கேப்டன்கள் பேச்சு மற்றும் இந்திய அணியின் திட்டம் குறித்து முழுமையாக பார்க்கலாம். இரு அணிகளின் பிளேயிங் 11 செய்தியின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது.
டாஸின்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் மிகவும் உற்சாகமான மனநிலையில் காணப்பட்டார். டாஸ் வென்ற அவர், "நாங்கள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்கிறோம். ஆடுகளம் புதிதாகவும், பந்துவீச்சுக்கு சாதகமாகவும் தெரிகிறது. இன்று ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், போட்டியின் பிற்பகுதியில் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது." என்று தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரக கேப்டன் முஹம்மது வசீமும் தாங்கள் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என்று கூறினார். இது சூர்யகுமாரின் முடிவு சரி என்பதை உணர்த்துகிறது.

இந்திய அணியின் பிளேயிங் 11-ல் மிகப்பெரிய ஆச்சரியம் சஞ்சு சாம்சனின் வருகை. சமீப காலமாக அவர் அணியில் புறக்கணிக்கப்படுவதாக பல செய்திகள் வெளிவந்தன. பயிற்சி ஆட்டங்களில் கூட அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவிற்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால், சஞ்சு சாம்சனின் ஆசியக் கோப்பை கனவு கேள்விக்குறியானது. ஆனால், அனைத்து விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று ஜிதேஷ் சர்மாவிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்கி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சு கலவை (combination) அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா என்ற ஒற்றை சிறப்பு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டுமே இந்தியா களமிறங்குகிறது. அவருக்குத் துணையாக ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே வேகப்பந்து வீச்சுப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்திய டி20 அணியின் முக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளரும், தற்போது உலகின் நம்பர் 1 டி20 வேகப் பந்துவீச்சாளராகவும் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் நோக்கில், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் இந்தியா களமிறக்கியுள்ளது. இவர்களுடன் அக்சர் படேலும் இணைந்து சுழற்பந்து வீச்சு தாக்குதலை வலுப்படுத்துவார். துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பில் இந்த துணிச்சலான முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்துள்ளது.
ரசல் அர்னால்ட் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பிட்ச் அறிக்கையின்படி, இந்த ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில விரிசல்கள் மற்றும் புற்கள் உள்ளன. ஒருபுறம் 62 மீட்டரும், மறுபுறம் 75 மீட்டரும் என பவுண்டரி எல்லைகள் அமைந்துள்ளன. ஆடுகளத்தின் தன்மையைக் கணிப்பது கடினம் என்பதால், முதலில் பந்துவீசி, இலக்கைத் துரத்துவது சரியான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரஃபு, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா (விக்கெட் கீப்பர்), ஆசிப் கான், ஹர்ஷித் கௌஷிக், ஹைதர் அலி, துருவ் பராஷர், முஹம்மது ரோஹித் கான், ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங்.