மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி பும்ரா என்ற ஒரே ஒரு தனித்துவ வேகப்பந்துவீச்சாளரை நம்பி களமிறங்கியது. இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சிவம் துபேவையும் களமிறங்கினர்.
இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, யுஏஇ அணியை 57 ரன்கள் எல்லாம் சுருட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் சிவம் துபே இரண்டு ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் வீசி 10 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பும்ரா மூன்று ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், யுஏஇ போன்ற சின்ன அணிகளுக்கு எதிராக இந்த திட்டம் கை கொடுக்கும். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக இந்த திட்டம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பும்ரா ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளர். ஆனால் அவருக்கு அடுத்தது இரண்டு ஆல்ரவுண்டர்களை நம்பி நீங்கள் களமிறங்கி இருக்கிறீர்கள்.
ஆர்ஸ்தீப் சிங் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆர்ஸ்தீப் சிங் இங்கிலாந்து தொடரில் விளையாடவில்லை. அது கூட டெஸ்ட் தொடர் என்று காரணத்தை சொல்லிவிடலாம். ஆனால் இப்போது நடைபெறுவது டி20 போட்டி இந்தியாவில் தற்போது நம்பர் ஒன் டி20 வேகப்பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் தான் இருக்கின்றார். அவர் இல்லாமல் எப்படி இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாட முடியும்.
ஆர்ஸ்தீப் சிங்கால் 10 யாகர் பந்துகளை தொடர்ந்து வீச முடியும். இதனை நாம் ஐபிஎல் தொடரிலேயே பார்த்திருக்கின்றோம். பும்ராவும்,ஆர்ஸ்தீப் சிங்கும் பந்து வீசினால் அது எதிரணிக்கு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஹர்திக் பாண்டியா சிவம் துபே போன்ற வீரர்கள் கூடுதல் பவுலிங்கை மட்டும் தான் வீச வேண்டுமே, தவிர அவர்களை வைத்து அணியின் முக்கிய ஓவர்களை வீச முடியாது. ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே தொடர்ந்து பத்து யாக்கர்களை வீச முடியுமா? எனவே இந்திய அணி தங்களுடைய திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.