மும்பை: இந்தியாவிடம் வம்பு இழுத்தால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கின்றார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றில் மோதியது.
இதில் இரண்டிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் வீரர்கள் அதிருப்தியில் பல்வேறு சர்ச்சை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், "இந்தியா வெற்றி பெறுகிறது, இந்தியா வளர்கிறது."

"இதுதான் இந்தியாவுடைய மேஜிக். ஆனால் கடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் தேவையில்லாமல் வம்பி இழுத்தார்கள். அதை தான் அபிஷேக் ஷர்மா பரிசளிக்கும் நிகழ்ச்சியில் கூறினார். இதை அவர்கள் செய்திருக்கக் கூடாது."
"அதனால் தான் நான் சொல்கின்றேன். சமூக வலைத்தளத்தில் நீங்கள் தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருங்கள். நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்போம். இதுதான் என்னுடைய வெளிப்படையான மெசேஜ். உங்களுடைய இந்த செயலால் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது."
இனி பதிலடி தருவோம்:
"நாங்கள் எதுவும் பேசுவதும் கிடையாது,செய்வதும் கிடையாது. நாங்கள் அமைதியாக எங்களுடைய கிரிக்கெட்டை விளையாடிக் கொண்டே இருப்போம். ஆனால் அதே சமயம் எங்களை வம்பு இழுத்தால் நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம். நீங்கள் ஆஸ்திரேலியா வீரராக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் வீரர்களாக இருந்தாலும் சரி நாங்கள் எங்களுடைய பதிலை சொல்வோம்."
"எங்களுடைய பதிலை பேட் மூலமாகவும் சொல்லுவோம். ஆனால் நிச்சயம் பதில் சொல்வோம். நாங்கள் பாகிஸ்தான் எப்படி தோற்கிறது என்பது குறித்து இதுவரை பேசியதே இல்லை. ஜிம்பாப்வேவிடம் டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோற்றது. அது குறித்து நான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. ஏனென்றால் அது எங்களுடைய வேலை இல்லை."
"நீங்கள் வெற்றி பெற்றால் என்ன தோற்றால் எங்களுக்கென்ன? நாங்கள் கிரிக்கெட்டில் நடப்பதை மட்டும் சரியாக ஆய்வு செய்து கூறுவோம். ஆனால் உங்களைப் பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எங்களிடம் தொடர்ந்து வம்பு இழுத்து வருகிறார்கள். அப்படி செய்தால் நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்."
தேவையில்லாத வேலை:
"இதுதான் எங்களுடைய ரூல். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடிய விதம் மிகவும் தவறு. இரண்டு நாடுகளுக்கு இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும்போது நீங்கள் அரை சதம் அடித்து விட்டு, அப்படி கொண்டாடிட்டு கொண்டாடி இருக்க கூடாது. நான் ஹரிஷ் ரவுபை பார்த்திருக்கிறேன்."
"அவர் நல்ல பையன் போல்தான் தெரிந்தார். ஆஸ்திரேலியாவில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அவர் என்னிடம் மிகவும் மரியாதையாக பேசினார். ஆனால் நேற்று அவர் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே தேவையில்லாதது. உங்களுடைய நடத்தை மூலம்தான் நீங்கள் எவ்வாறு வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று தெரியும்" என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.