மும்பை: இந்திய டி20 அணியில் ஷுப்மன் கில் திரும்பி இருப்பது, கேப்டன் சூர்யகுமாருக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் வெளிப்படையான பதிலை தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய இர்ஃபான் பதான், "சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் சூரிய குமார் யாதவின் பங்களிப்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அவருடைய அனுமதி இல்லாமல் இப்படி ஒரு நகர்வு நடந்திருக்காது. சூரியகுமார் எதிர்காலத்தை நினைத்து தான் இந்த முடிவை எடுத்திருப்பார். தற்போது அவருக்கு 34 வயதாகிறது. களத்தில் பேட்ஸ்மனாக செயல்படுவதை விட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை சூரியகுமார் நிச்சயம் உணர்ந்து இருப்பார்."

"அவர் தனது அணியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இந்திய டி20 அணியில் தலைமை பொறுப்பில் அதிக நபர்கள் இருக்க வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம். சுப்மன் கில் துணை கேப்டனாக வந்ததால் சூரியகுமாருக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அப்படி கிடையாது."
"எதிர்கால திட்டத்தை மனதில் வைத்தே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கும். கில் டி20 அணியில் வந்திருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு தான் நல்ல விஷயம். இதன் மூலம் சூரிய குமார் , தாம் ஒரு பக்குவப்பட்ட தலைவர் என்பதை நிரூபித்து இருக்கிறார். சூரியகுமாரின் இந்த நகர்வு அவருக்கு மரியாதையை சேர்க்கும்.தற்போது சூரியகுமார் மீது எந்த ஒரு நெருக்கடியும் யாரும் செலுத்தக் கூடாது. எனவே அவருக்கு அச்ச உணர்வு இருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன். இதுபோல் நடந்து கொள்வது சூரிய குமாரின் தலைமைத்துவத்தை மட்டுமே அதிகரிக்கும்."
சூர்யகுமார் யாதவ், ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். ஐபிஎல் 2025-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்து அபாரமாக விளையாடினார். இதன் முலம் சூர்யகுமாரின் வருகையால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாகும்.
மறுபுறம், ஷுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் குவித்து, நான்கு சதங்களுடன் அபாரமாக ஆடியதன் மூலம், டி20 போட்டிக்கு திரும்பியுள்ளார். 25 வயதான இவர், ஐபிஎல் 2025-ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 650 ரன்கள் எடுத்து, 155.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் நான்காவது அதிக ரன்கள் எடுத்தவராக திகழ்ந்தார்.
கில், 2023-ல் இலங்கைக்கு எதிராக டி20 அறிமுகம் செய்து, 21 போட்டிகளில் 578 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும் மூன்று அரைசதங்களும் அடங்கும்.இந்திய அணியின் தற்போதைய முதல் ஐந்து பேட்ஸ்மேன்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா உள்ளனர்.
இதனால் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் கிடைப்பது சவாலாக உள்ளது. இந்திய அணி செப்டம்பர் 10-ஆம் தேதி யுஏஇ-க்கு எதிராக தனது ஆசிய கோப்பை பயணத்தை தொடங்கவுள்ளது. பின்னர் செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தானுடன் முக்கியமான போட்டியில் மோதவுள்ளது.