சென்னை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு, முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்த அணித் தேர்வை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"இந்த அணியை வைத்துக்கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமானால் ஜெயிக்கலாம், ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாது" என்று அவர் தேர்வுக் குழுவை விளாசி இருக்கிறார்.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் முடிவுகள் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறிய ஸ்ரீகாந்த், தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து காட்டமாகப் பேசியுள்ளார். "அடுத்த ஆறு மாதங்களில் டி20 உலகக்கோப்பை வரவிருக்கிறது. அதற்கான தயாரிப்பா இது? இந்த அணியை வைத்துக்கொண்டு உலகக்கோப்பைக்குச் செல்லப் போகிறீர்களா? தேர்வாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்," என்று அவர் சாடியுள்ளார்.
குறிப்பாக, 2025 ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய ரிங்கு சிங், சிவம் துபே மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு அணியில் இடம் கொடுத்திருப்பதை ஸ்ரீகாந்த் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். "ஐபிஎல் தொடர்தான் அணித் தேர்வுக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. ஆனால், தேர்வாளர்கள் அதற்கு முந்தைய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டதாகத் தெரிகிறது. ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் எப்படி அணிக்குள் வந்தார்கள் என்றே எனக்குப் புரியவில்லை," என்றார் ஸ்ரீகாந்த்.
டி20 போட்டிகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடாத சுப்மன் கில்லை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்து, அவருக்குத் துணை கேப்டன் பதவியும் கொடுத்திருப்பதையும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அக்சர் படேல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
அணியின் பேட்டிங் வரிசை குறித்தும் ஸ்ரீகாந்த் தனது கவலையை வெளிப்படுத்தினார். "ஐந்தாவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள்? அந்த இடத்தில் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சிவம் துபே அல்லது ரிங்கு சிங் ஆகியோரில் ஒருவர்தான் ஆட வேண்டும். பொதுவாக ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் ஆடுவார். இப்போது அக்சர் படேலால் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியாது. சிவம் துபேவை எப்படித் தேர்வு செய்தார்கள் என்பது எனக்குப் புரியவில்லை," என்று அவர் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது குறித்தும் ஸ்ரீகாந்த் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். ஒட்டுமொத்தத்தில், ஸ்ரீகாந்த்தின் இந்தக் கடுமையான விமர்சனங்கள், ஆசிய கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு குறித்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது. இந்த அணி கலவையுடன் இந்தியாவால் அடுத்த டி20 உலகக்கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற பெரிய கேள்விக்குறியை அவர் எழுப்பியுள்ளார்.