மும்பை: ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியதன் காரணமாக இரு அணிகளும் எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கு தகுந்தார் போல் உலக சாம்பியன்ஸ் லெஜென்ஸ் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க அதில் விளையாட இருந்த பல இந்திய வீரர்கள் விலகியதை அடுத்து அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த தருணத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பிடித்திருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் அதிகபட்சமாக இரண்டு அணிகளும் மூன்று முறை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், தற்போது நாட்டு நிலைமையை பார்க்கும்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க கூடாது.
நாம் அனைவருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியும். நாம் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறோம் என்று பார்க்கின்றோம். ஒருவேளை நாம் இந்த போட்டியில் விளையாடுகிறோம் என்றால் அனைத்து விதமான போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவேண்டும். கிரிக்கெட்டை மட்டும் தேர்வு செய்து குறை சொல்லக்கூடாது.
நாம் எவ்வளவு சொன்னாலும் இறுதி முடிவை அரசும் பிசிசிஐயும் இணைந்து தான் எடுப்பார்கள். நான் இதை சொல்வதற்கு முன்பு பலமுறை யோசித்து புரிந்து கொண்டு கவனமாக தான் இந்த கருத்தை சொல்கின்றேன். இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை தீரும் வரை நாம் முன்னோக்கி செல்லக்கூடாது என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு வெறும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் தான் இரு அணிகளும் மோதி வருகிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.