துபாய்: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, வெற்றி பெற்ற இந்திய அணிக்குக் கோப்பையை வழங்காமல், அதைத் தன்னுடன் எடுத்துச் சென்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோஷின் நக்வி, தற்போது இந்தச் சர்ச்சையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு கோப்பை மற்றும் வெற்றிப் பதக்கங்களைத் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளதாகவும், ஆனால், அதற்காக ஒரு 'முறையான விழா' ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'Cricbuzz' (கிரிக்பஸ்) வெளியிட்டுள்ள செய்தியின்படி, மோஷின் நக்வி தனது இந்த நிபந்தனையை ஆசிய கோப்பை தொடர் அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஒரு சிறு குழந்தை போல, "விழா எடுத்தால் தான் கொடுப்பேன். என் கையால் தான் இந்திய அணியிடம் கொடுப்பேன்" என அடம் பிடித்து இருக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி.

ஆனால், பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் தற்போதைய மனநிலையில், இது போன்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இதனால், இந்த 'கோப்பை சர்ச்சை' இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடரும் என்றே தெரிகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவும் இருக்கும் மோஷின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டிற்காகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காகவும் அறியப்படுபவர். இந்த நிலையில், இறுதிப் போட்டிக்குப் பிறகு, அவரிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அணியின் இந்த முடிவுக்கு முழு ஆதரவு அளித்தது.
பரிசளிப்பு விழாவின்போது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த இழுபறி நீடித்தது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் காலித் அல் ஜரூனி அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோரிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்வதாக இந்திய அணி மாற்று யோசனையை முன்வைத்தது. ஆனால், தனது சொந்த நாட்டில் தனது மரியாதையை, பிம்பத்தை பாதுகாத்துக்கொள்ள நினைத்த மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், 'நான்தான் கோப்பையை வழங்குவேன்' என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்த இழுபறிக்கு மத்தியில், மோஷின் நக்வி மேடையை விட்டு வெளியேறியதோடு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளும் கோப்பையுடன் அவரைப் பின்தொடர்ந்து மைதானத்தை விட்டு வெளியேறினர். தற்போது, அந்தக் கோப்பை, மைதானத்திற்கு அருகிலுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய வீரர்கள் கோப்பை இல்லாதபோதிலும், தங்கள் வெற்றியைத் தனித்துவமான முறையில் கொண்டாடினர். 'கற்பனையான கோப்பையை' உயர்த்திப் பிடித்தும், காபி 'கப்'-களுடன் புகைப்படங்களை எடுத்தும், கோப்பை எமோஜிக்களைப் பகிர்ந்தும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மோஷின் நக்வியின் இந்த புதிய நிபந்தனை, ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. பிசிசிஐ இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே, இந்த கோப்பை சர்ச்சைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.