துபாய்: இந்தியாவுடனான 'கைகுலுக்கல் சர்ச்சை' பாகிஸ்தான் கிரிக்கெட்டை தனக்கு தானே படுகுழியில் தள்ள வைத்துள்ளது. போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், பாகிஸ்தான் அணி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பையே அதிரடியாக ரத்து செய்துள்ளது. தொடரிலிருந்து விலகுவோம் என்ற மிரட்டல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பும் சங்கடமான கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்கு போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டே காரணம் என்று சம்பந்தமே இல்லாத அளவில் குற்றம் சாட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), அவரை நீக்கவில்லை என்றால் ஆசிய கோப்பையிலிருந்து விலகுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், பாகிஸ்தானின் இந்த மிரட்டலுக்கு ஐசிசி துளியும் பணியவில்லை.

"நேற்று இரவு, பைக்ராஃப்ட் நீக்கப்பட மாட்டார் என்றும், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் பிசிபிக்கு ஐசிசி பதில் அனுப்பியுள்ளது," என்று ஐசிசி வட்டாரங்கள் செய்தி நிறுவனமான பிடிஐ-யிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
ஐசிசி-யின் இந்த முடிவால், பாகிஸ்தான் அணி தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தாங்கள் விடுத்த மிரட்டல் பலிக்காத நிலையில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், பத்திரிகையாளர் சந்திப்பையே ரத்து செய்துள்ளது பாகிஸ்தான்.
"பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டாலும், வீரர்கள் பயிற்சி அமர்வில் கலந்துகொள்வார்கள். தொடரிலிருந்து விலகுவோம் என்ற மிரட்டல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பும் சங்கடமான கேள்விகளைத் 'தவிர்ப்பதற்காகவே' இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. அந்த அணி அப்படி ஒரு முடிவை எடுத்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ஐசிசி கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும்.
"பிசிபி ஆசிய கோப்பையிலிருந்து விலகுவது மிகவும் சாத்தியமற்றது. அப்படிச் செய்தால், ஐசிசி எங்கள் மீது கடுமையான தடைகளை விதிக்கும். சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு மைதானங்களை புனரமைத்ததால், ஏற்கனவே மோசமான நிதி நிலையில் உள்ள எங்கள் வாரியத்தால் இதைத் தாங்க முடியாது," என்று இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
தாங்கள் விடுத்த மிரட்டல் தங்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளதால், பாகிஸ்தான் அணி தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தது, இந்த விவகாரத்திலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி தங்கள் ஈகோவை கைவிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் பங்கேற்குமா அல்லது மிரட்டலை நிறைவேற்றி தொடரிலிருந்து வெளியேறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.