துபாய்: 2025 ஆசிய கோப்பையின் மிக முக்கியமான வாழ்வா சாவா ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற ஒரு சிறிய அணியை எதிர்த்து, பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் படுமோசமாகத் தடுமாறி, ஒருவழியாக வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால், இந்தத் தடுமாற்றமான வெற்றிக்குப் பிறகும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவின் பேச்சில் மட்டும் எந்தக் குறைச்சலும் இல்லை. தனது அணியின் குறைகளை ஒப்புக்கொண்ட கையோடு, ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பந்துவீச்சில் சிக்கித் திணறியது. அந்த அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஃபக்கர் ஜமான்னின் (50) அரைசதமும், பந்துவீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடியின் (29*) கடைசி நேர அதிரடியும் இல்லையென்றால், பாகிஸ்தானின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பியதால், பாகிஸ்தான் அணி 146 ரன்களை எட்டுவதற்கே போராடியது.

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சல்மான் அகா, தனது அணியின் பலவீனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். "நாங்கள் வேலையை முடித்துவிட்டோம், ஆனால் எங்கள் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். அது ஒரு கவலையாக உள்ளது, அதில் நாங்கள் வேலை செய்ய வேண்டும். அதைத் தவிர, நாங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்தோம்" என்று அவர் கூறினார்.
மேலும், "நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை... நாங்கள் இன்னும் 150 ரன்களை எட்டுவதற்கே வழி தேடிக்கொண்டிருக்கிறோம். மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால், எதிரணி யாராக இருந்தாலும், நாங்கள் அதை 170 ஆக உயர்த்த முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது அணியின் பலவீனங்களைப் பட்டியலிட்ட பிறகும், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து சல்மான் அகா பேசியதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் கேலிக்குள்ளாகி இருக்கிறது.
"நாங்கள் எந்தவொரு சவாலுக்கும் தயாராக இருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக நாங்கள் விளையாடிய விதத்தில் தொடர்ந்து விளையாடினால், எந்த அணிக்கு எதிராகவும் நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம்" என்று அவர் அடுத்து நடைபெற உள்ள இந்தியாவுடனான சூப்பர் 4 போட்டி குறித்து மறைமுகமாக எச்சரித்தார்.
இந்தியாவிடம் குரூப் சுற்றில் படுதோல்வி, ஐக்கிய அரபு அமீரகத்திடம் தடுமாற்றம் என இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கேப்டனின் இந்த சவால், கிரிக்கெட் வட்டாரத்தில் வெறும் வெற்றுப் பேச்சாகவே பார்க்கப்படுகிறது. முதலில் தங்கள் அணியின் பேட்டிங் பிரச்சினைகளைச் சரி செய்வதில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுப்பது, மேட்ச் ரெப்ஃரீயை மாற்ற வேண்டும் என நாடகம் போடுவது எல்லாம் பாகிஸ்தான் அணியின் தன்னம்பிக்கையற்ற நிலையைத்தான் காட்டுகிறது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.