துபாய்: ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஆசிய கோப்பை டி20 தொடருக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து தொடர் முடிவடைந்து சரியாக 35 நாட்கள் பிறகு தான் இந்த தொடர் நடைபெறுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடர் எப்போது தொடங்கும் என எதிர்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான அட்டவணைப்படி இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்று இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக அந்த நாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாட மறுத்துவிட்டனர்.

இதனால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத்தை பொறுத்தவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கின்றார். இந்த நிலையில் தன்னுடைய பவரை பயன்படுத்தி ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் துபாயில் நடத்துவது போல் அட்டவணையை தயாரித்திருக்கிறார்.
இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்தியா முதல் இரண்டு போட்டிகளை துபாயில் விளையாடினாலும், மூன்றாவது போட்டியை அபுதாபியில் விளையாடுகிறது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் துபாயில் நடந்தது. இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானை சேர்ந்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள். மற்ற நாடுகள் எல்லாம் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் போது, இந்தியா மட்டும் எப்படி ஒரே மைதானத்தில் விளையாடலாம். அருகில் உள்ள அபுதாபியிலும் ஒரு போட்டியை வைத்திருக்கலாமே என்று பல கேள்விகளை கேட்டனர். இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடியதால் தான் வெற்றி பெற்றது என்று வாய் கூசாமனும் பேசினார்கள்.
ஆனால் இந்தியா செய்ததை தவறு என்று சொல்லிவிட்டு தற்போது அதையே பாகிஸ்தானும் மீண்டும் செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி எங்களை குறை சொன்ன நீங்கள், அதே தானே செய்கிறீர்கள். எங்களுக்கு வந்தால் ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர்.