துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் தொடர்ந்து அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) எதிராக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பு, "தொடரின் பல விதிகளை மீறியதாகவும்", "தவறான நடத்தைக்காகவும்" (misconduct) ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு ஒரு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டி, பாகிஸ்தான் அணியின் அடாவடியால் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால், பாகிஸ்தான் அணி தங்கள் ஹோட்டலை விட்டு வெளியேற மறுத்தது. இந்த நிலையில், டாஸுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பின்போதுதான், பாகிஸ்தான் அணி பல விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, நடுவர் பைக்ராஃப்ட், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆகியோரை சந்தித்துப் பேச ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இந்தச் சந்திப்பின்போது, பலமுறை எச்சரித்தும், பாகிஸ்தான் அணி தங்களின் மீடியா மேனேஜரான நயீம் கிலானியை அந்தச் சந்திப்பை வீடியோ எடுக்க அனுமதித்துள்ளது. இது ஐசிசி-யின் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதி (PMOA) நெறிமுறைகளின் அப்பட்டமான மீறலாகும்.
ஐசிசி ஊழல் தடுப்பு மேலாளர், நயீம் கிலானியை கூட்டத்திற்குள் அனுமதிக்க மறுத்தார், ஏனெனில் அவர் தனது மொபைல் ஃபோனை PMOA பகுதிக்குள் கொண்டு செல்ல முயன்றார். அப்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "மீடியா மேனேஜர் அனுமதிக்கப்படாவிட்டால், நாங்கள் போட்டியிலிருந்து விலகுவோம்" என்று மீண்டும் ஒருமுறை மிரட்டல் விடுத்துள்ளது.
இறுதியாக, போட்டியின் நலனைக் கருதி, பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொண்டது. பாகிஸ்தான் மீடியா மேனேஜர், ஆடியோ இல்லாமல் அந்த உரையாடலை வீடியோ எடுக்க அனுமதிக்கப்பட்டார். இது PMOA விதிமுறைகளின் மற்றொரு மீறலாகும்.
இந்த வீடியோ கிளிப்பை வைத்துக் கொண்டுதான், நடுவர் 'மன்னிப்பு' கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு போலிச் செய்தியைப் பரப்பியது. உண்மையில், நடுவர் 'தவறான தகவல் தொடர்புக்காக' வருத்தம் மட்டுமே தெரிவித்திருந்தார். இப்படி ஒரு தவறான செய்தியை பரப்ப திட்டமிட்டே அந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் செயலும் ஐசிசியின் கோபத்தை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து விதிகளை மீறுவது, ஐசிசி அதிகாரிகளையே மிரட்டுவது, போலிச் செய்திகளைப் பரப்புவது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் செல்வதால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஐசிசி தயாராகி வருவதாகத் தெரிகிறது.
"ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா, போட்டி நாளில் பிசிபி பலமுறை PMOA விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி பிசிபிக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியுள்ளார். அந்த மின்னஞ்சல் பிசிபிக்கு கிடைத்துள்ளது," என்று தொடர் வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த 'தவறான நடத்தை'க்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது அபராதம் அல்லது வேறு கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.