துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ளும் முன்பாக, பாகிஸ்தான் அணி மீண்டும் ஒருமுறை போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்து இருக்கிறது. ஏற்கனவே கனன்று கொண்டிருக்கும் 'கை குலுக்கல் மறுப்பு' சர்ச்சைக்கு மேலும் எண்ணெய் வார்த்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டிக்கு முன் பாகிஸ்தான் நடத்திய நாடகம் இன்னும் முடியவில்லை. மீண்டும் இந்திய அணிக்கு எதிராகவும் அது தொடர்கிறது என நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) அதிகாரப்பூர்வ அட்டவணைப்படி, துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில், உள்ளூர் நேரப்படி இன்று (செப்டம்பர் 20) மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7:30 மணி) பாகிஸ்தான் வீரர் அல்லது அணி நிர்வாகி ஒருவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருந்தனர். அதனைத் தொடர்ந்து மூன்று மணி நேரப் பயிற்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும், பயிற்சி மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. இந்த திடீர் புறக்கணிப்புக்கான காரணம் என்னவென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதன் பின்னணியில் இருப்பது சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய அதே கை குலுக்கல் சர்ச்சைதான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் போட்டியின்போதும் இதேபோன்று புறக்கணிப்பில் ஈடுபட்டது. அந்தப் புறக்கணிப்புக்குக் காரணம், இந்தியா-பாகிஸ்தான் முதல் போட்டியின்போது போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நடந்துகொண்ட விதம் என்று கூறப்பட்டது.
டாஸ் போடும்போது, வழக்கமான கை குலுக்கல்கள் இருக்காது என்று இரு அணி கேப்டன்களிடமும் பைகிராஃப்ட் தெரிவித்ததும், போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஐசிசி தலையிட்டு, போட்டி நடுவர் பைகிராஃப்ட்-இற்கும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தது. அதில், நடந்த நிகழ்வுகளுக்கு பைகிராஃப்ட் தனது வருத்தத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி தங்களது போராட்டத்தைக் கைவிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது. ஆனால், அந்தப் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.
எல்லாம் சுமூகமாகிவிட்டது என்று நினைத்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பைகிராஃப்டுடனான சந்திப்பின் வீடியோவை ஆடியோ இல்லாமல் வெளியிட்டு, சர்ச்சையை மீண்டும் பற்றவைத்தது. இது ஐசிசி-க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், பாகிஸ்தானுக்குக் கடுமையான வார்த்தைகளில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டிக்கும் அதே ஆண்டி பைகிராஃப்டை போட்டி நடுவராக ஐசிசி நியமித்துள்ளது. இதற்குத் தங்களது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் விதமாகவே, பாகிஸ்தான் அணி மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்துள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன் இன்னும் எத்தனை நாடகங்களை நாம் பார்க்க வேண்டுமோ?