துபாய்: ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் கடந்த நான்கு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த ஒரு அணி, அதுவும் தங்களது முக்கிய வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானையே கழற்றிவிட்டு, ஒரு இரண்டாம் தர அணியை வைத்துக்கொண்டு, "இந்தியாவை ஆசிய கோப்பையில் வீழ்த்துவோம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆக்கிப் ஜாவேத் பேசியதைக் கேட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

கடைசியாக 2022 ஆசிய கோப்பையில் தான் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு, ஆசிய கோப்பை 2023, ஒருநாள் உலகக் கோப்பை 2023, டி20 உலகக் கோப்பை 2024, மற்றும் சாம்பியன்ஸ் டிராபி 2025 என கடந்த நான்கு முக்கியப் போட்டிகளிலும் இந்திய அணி பாகிஸ்தானை ஊதித் தள்ளியது.
இப்படி படுதோல்விகளை சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியால் எளிதாக இந்தியாவை வீழ்த்த முடியும் என்று ஆக்கிப் ஜாவேத் கூறியிருப்பது பெரும் நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அதிர்ச்சியாக, அந்த அணியின் மூத்த வீரர்களான கருதப்படும் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இவர்களைத் தவிர, ஷதாப் கான், நசீம் ஷா போன்ற முக்கிய வீரர்களும் அணியில் இல்லை. சல்மான் அலி ஆகா தலைமையில் ஒரு புதிய, அனுபவமில்லாத அணி களமிறங்குகிறது. சமீப காலமாக பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதிக அனுபவ வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணியால் மட்டும் என்ன செய்து விட முடியும்? என்ற கேள்வி உள்ளது.
இந்த அணியை வைத்துக்கொண்டுதான், ஆக்கிப் ஜாவேத், "இந்த அணியால் ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்த முடியும். உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இந்தியா-பாகிஸ்தான் போட்டிதான் உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டி. இது ஒவ்வொரு வீரருக்கும் தெரியும். எங்கள் அணி எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டது. அனைவரும் தயாராக இருக்கிறார்கள்" என்று வீராவேசமாகப் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவி வரும் பதட்டமான சூழலையும் ஆக்கிப் ஜாவேத் சுட்டிக்காட்டியுள்ளார். "இரு நாடுகளுக்கும் இடையிலான சூழல் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக வீரர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை நாங்கள் சுமத்த விரும்பவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருபுறம் முக்கிய வீரர்களை நீக்கிவிட்டு, மறுபுறம் இரு நாட்டுப் பிரச்சனைகளைப் பேசி வீரர்களுக்கு உத்வேகம் கொடுப்பது போல் பேசுவது, பாகிஸ்தான் அணியின் பலவீனத்தை மறைக்கும் செயல் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
செப்டம்பர் 14-ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அன்று தெரியும், பாகிஸ்தானின் இந்த "பில்டப்" எந்தளவுக்கு வேலை செய்கிறது என்று. இப்போதைக்கு, பாபர், ரிஸ்வான் இல்லாத ஒரு அணியை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் விடுக்கும் இந்த சவாலை, இந்திய ரசிகர்கள் நகைச்சுவையாகவே கடந்து செல்கின்றனர்.