துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடர் இன்று (செப்டம்பர் 9) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. செப்டம்பர் 28 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் இந்தத் தொடரில், ஆசியாவின் எட்டு முன்னணி அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. இந்த ஆண்டு டி20 வடிவத்தில் நடைபெறும் இத்தொடருக்கான பரிசுத் தொகை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆசியக் கண்டத்தின் முதன்மை கிரிக்கெட் போட்டியான இதன் தொடக்க ஆட்டத்தில், 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை அபுதாபியில் எதிர்கொள்கிறது. உலகின் நம்பர் 1 டி20 அணியான இந்தியா, தனது முதல் போட்டியில் போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தை சந்திக்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 10 அன்று துபாயில் நடைபெற உள்ளது.

2025 ஆசியக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஆசியக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ. 2.6 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 1.3 கோடி பரிசுத் தொகையாகக் கிடைக்கும்.
மேலும், தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு, "தொடர் நாயகன்" விருதை வெல்லும் வீரருக்கு ரூ. 12.50 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணியே அதிக முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இந்த முறையும் இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி இந்திய அணி கோப்பையை வென்றால் 2.6 கோடி மட்டுமே பரிசுத் தொகையாக கிடைக்கும். இது ஐபிஎல் தொடரில் பல வீரர்களின் சம்பளத்தை விட குறைவு.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் நடைபெற்றது. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இலங்கையை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ. 1.25 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்ட பிறகு, கிரிக்கெட் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது. 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் இந்தப் போட்டி, செப்டம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயில் நடைபெற உள்ளது. தனது மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், இந்திய அணி செப்டம்பர் 19 அன்று ஓமன் அணியை அபுதாபியில் எதிர்கொள்கிறது.
'ஏ' பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில், இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி பெறும். இந்தத் தொடரில் 'ஏ' பிரிவிலிருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. "பி" பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி இருக்கக் கூடும்.