மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் புதிய பினிஷர் ஆக உருவெடுத்திருக்கிறார் இடது கை பேட்ஸ்மன் ஆன ரிங்கு சிங். 28 வயதை நெருங்கும் ரிங்கு சிங் இதுவரை இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 546 ரன்களும், இரண்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகள் விளையாடி 55 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைப்பதற்காக தற்போது போராடி வருகிறார். தற்போது ஆசிய கோப்பை தொடரில் ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வளர்ந்த ரிங்கு சிங் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி பணக்கார கிரிக்கெட் வீரராக மாறி இருக்கின்றார்.

தற்போது நடந்து முடிந்த உத்தர பிரதேச பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரிங்கு சிங் இரண்டு அரை சதம் உட்பட 332 ரன்கள் குவித்து இருக்கின்றார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங் 206 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 153 என்ற அளவில் இருந்தது.
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய ரிங்கு சிங் எனக்கு எப்போதுமே கெளதம் கம்பீர் உறுதுணையாக இருந்தார். அவரை நான் முதல் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த போதுதான் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். எப்போதுமே என்னுடன் பேசி எனக்கு கிரிக்கெட் யுக்திகளை கற்றுக் கொடுப்பார்.
புல் ஷாட்களை எப்படி ஆடுவது என்று சொல்லித் தருவார். அவர் எப்போதுமே வீரர்களை ஆதரிப்பார். அவர் நம்மிடம் வந்து பேசினாலே தானாக தன்னம்பிக்கை தொற்றிக் கொள்ளும். கிரிக்கெட் தொடர்பான நிறைய அறிவு அவருக்கு இருக்கின்றது. அவருடன் சேர்ந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பேட்டிங் அல்லது பயிற்சி என எதுவாக இருந்தாலும் நான் அவரிடம் தான் கேட்பேன். இதுபோல் ட்ரெஸ்ஸிங் ரூமில் அவருடன் இருப்பது மகிழ்ச்சியான நேரமாக இருந்தது. தற்போது மீண்டும் அவருடன் பயிற்சி செய்ய நான் ஆர்வத்துடன் இருக்கின்றேன். கம்பீர் போன்ற ஒரு ஜாம்பவானுடன் ட்ரெஸ்ஸிங் ரூம்மை பகிர்ந்து கொள்வது சிறந்த தருணமாக நான் நினைக்கின்றேன்.
ஆசிய கோப்பை தொடரில் என்னுடைய ரோல் என்னவென்று எனக்கு தெரியவில்லை. துபாய்க்கு சென்றவுடன் அது குறித்து நான் அவரிடம் பேசுவேன். அவரிடமிருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். இதே போல் என்னை டி20 பேட்ஸ்மேன் என்று சொல்வது எனக்கு பிடிக்கவில்லை. என்னால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.